Shawarma restaurant owner arrested in Namakkal

Advertisment

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமை மதியம், மாலை, இரவு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதில் அந்த தனியார் உணவகத்தில் உணவருந்திய அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் உள்பட 13 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் உணவகத்தில் உணவு சாப்பிட்ட நாமக்கல் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நேற்றுமுன் தினம் இரவு சவர்மா, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளை வாங்கிக்கொண்டு சிறுமியின் உறவினர்கள் சாப்பிட்டுள்ளனர். பின்பு சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து நேற்று மாலை வீட்டிற்கு சென்ற நிலையில், இன்று காலை படுக்கையிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் உணவகத்தில் சாப்பிட்டதால்தான் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அந்த தனியார் உணவகத்தில் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தனியார் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகத்திற்கு சீல் வைத்தனர். இதனைத் தொடர்ந்து உணவகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், உணவக உரிமையாளர் குமார், சஞ்சய் மகத்கூத், தபாஸ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.