Skip to main content

புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் சுவர் சிறு மழைக்கே தாங்கல... ஒப்பந்ததாரர்- நெடுஞ்சாலைத்துறை கூட்டுக்கொள்ளை!

Published on 16/10/2020 | Edited on 16/10/2020

 

sewage water newly constructed rain damage in dharmapuri

 

தர்மபுரியில், புதிதாகக் கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் சுவர், ஒருநாள் மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது. ஒப்பந்ததாரரும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு தரமற்ற கட்டுமானப் பொருள்களால் கட்டியதால்தான் இடிந்து விழுந்ததாக சலசலப்பு கிளம்பியிருக்கிறது.

 

தர்மபுரியில், ஒட்டப்பட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி ஆண்கள் விடுதியில் இருந்து நீச்சல் குளம் வரையிலான ஒரு கி.மீ. தொலைவிற்கு புதிதாக கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிகள், சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடக்கின்றன. இதற்கான பட்ஜெட், 2 கோடி ரூபாய்.

 

சேலம் முதன்மைச் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் கோட்ட அலுவலகம் மற்றும் காவல்துறை எஸ்பி அலுவலகம் எதிரில், கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணிகள் நடந்தன. கட்டுமானப் பணிகள் முடிந்து, அதற்கான முட்டுகள் எல்லாம் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில்தான், அக்., 12, 13 ஆகிய நாள்கள் தர்மபுரியில் மழை பெய்தது. இதில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் எதிரில் கட்டப்பட்டிருந்த கழிவுநீர் வாய்க்கால் சுவர் இடிந்து விழுந்தது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர், சிறு மழைக்கே தாங்காத கழிவுநீர் வாய்க்கால் இடிந்து விட்டதால், எங்கே விசாரணையில் சிக்கிக் கொள்ளப் போகிறோமோ என்ற அச்சத்தில் இடிந்து விழுந்த சாக்கடை கால்வாய் சுவரை எக்ஸ்கவேட்டர் இயந்திரம் மூலம் அவசர அவசரமாக அடித்து நிரவி சமன்படுத்தினர். தரமற்ற கட்டுமானப் பொருள்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால் புதிதாகக் கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் சுவர் இடிந்து விழுந்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''கடந்த 2014- ஆம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தரமற்ற கட்டுமானப் பொருட்களால் அந்தப் பாலம் கட்டப்பட்டதால்தான், குறுகிய காலத்திலேயே இடிந்து போயிருப்பது தெரியவந்தது. அப்போது அந்தப் பிரச்னையில் தொடர்புடைய பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

 

sewage water newly constructed rain damage in dharmapuri

 

இந்த நிலையில்தான், தர்மபுரியிலும் கழிவுநீர் வாய்க்கால் சுவர் கட்டிமுடிக்கப்பட்ட இரண்டொரு நாளில் லேசான மழைக்குக் கூட தாங்காமல் இடிந்து விழுந்திருக்கிறது. நல்வாய்ப்பாக இதனால் யாருக்கும் எந்த விதச் சேதாரமும் ஏற்படவில்லை. கழிவுநீர் வாய்க்காலின் பக்கவாட்டுச் சுவர்கள் கட்டும்போது இரும்பு கம்பிகளால் செண்டரிங் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இடிந்து விழாமல் இருக்கும். ஆனால், தற்போது இடிந்து விழுந்த கழிவுநீர் வாய்க்கால் சுவர்கள் இரும்பு கம்பியால் ஆன செண்டரிங் செய்யப்படாமல்தான் கட்டப்பட்டன. அதனால்தான் சிறு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது. அதேபோல் தரமற்ற கட்டுமானப் பொருள்களும்கூட காரணமாக இருக்கலாம்.

 

கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொள்முதல் செய்துள்ளனர். அவர்கள் அதிகளவில் கமிஷன் எடுத்துக் கொள்வதால்தான் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டு இப்பணிகளைச் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

 

இதுபற்றி நாம் தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகரிடம் பேசினோம். ''சார்... கழிவுநீர் வாய்க்கால் சுவர் கட்டும் பணிகள், சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை உள்ளூரைச் சேர்ந்த இக்பால் என்ற ஒப்பந்ததாரர்தான் எடுத்துச் செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று காலையில்தான் கழிவுநீர் வாய்க்கால் சுவர் கட்டிமுடிக்கப்பட்டது. அன்று மாலையே கனமழை பெய்தது. அப்போது வாய்க்கால் சுவருக்கு சப்போர்ட்டாக வைக்கப்பட்டு இருந்த முட்டுகள் நகர்ந்துவிட்டன. அதனால்தான் கழிவுநீர் வாய்க்கால் சுவர்கள் இடிந்துள்ளன. சுமார் 10 மீட்டர் தூரத்திற்குதான் சேதம் அடைந்துள்ளன. அதன் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய்தான். பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இதையெல்லாம் பெருசு படுத்தாதீங்க சார்...,'' என்றார் தனசேகர்.

 

சேதத்தின் மதிப்பு சின்னதோ பெரியதோ... விரயமாக்கப்பட்டது மக்களின் வரிப்பணம் என்பதை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.