Advertisment

எடப்பாடிக்கு கட்அவுட் வைத்தபோது விபத்து; மின்சாரம் தாக்கியதில் தொழிலாளிகள் இருவருக்கு தீவிர சிகிச்சை!!

Power supply

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகையையொட்டி, அவருக்கு கட்அவுட் வைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு ஏழை கூலித்தொழிலாளிகள் மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் நேற்று (அக்டோபர் 20, 2018) சேலம் வந்தார். ஓமலூர், தாரமங்கலம் ஆகிய இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

இதையொட்டி அவரை வரவேற்கும் விதமாக கட்சியினர் சாலையின் இருமருங்கிலும் கட்அவுட்டுகள் வைத்திருந்தனர். தாரமங்கலம் பேருந்து நிலையம் எதிரில், எடப்பாடி பழனிசாமியின் கட்அவுட் உயரமாக வைக்கச் சொல்லி கட்சியினர் உத்தரவிட்டு இருந்ததால், பந்தல் தொழிலாளிகள் மணி, ராஜவேல் ஆகியோர் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர்.

Advertisment

நேற்று அதிகாலை 3 மணியளவில் உயரமான கட்அவுட்டை வைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். கட்அவுட்டை சணல் கயிறுகளால் கட்டுவதற்காக உயரமான சாரத்தின் மீது அவர்கள் இருவரும் ஏறினர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் வயர் அவர்கள் மீது உரசியது. மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.

மின்சாரம் பாய்ந்ததில் ஒருவருக்கு கைகள், மார்பு, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மற்றொருவருக்கு கைகளில் மட்டும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருவருக்கும் முதல்கட்டமாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக, இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து விசாரித்தபோது, ''முதல்வர் வருகைக்காக அதிமுகவினர் கட்அவுட் வைக்கச் சொன்னார்கள். அதனால் உயரமான கட்அவுட் வைக்கும்போது மணி, ராஜவேல் ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்ததில் கீழே தூக்கி வீசப்பட்டனர்.

ஆனால் இது சம்பந்தமாக யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று அதிமுகவினர் சொல்லி இருக்கின்றனர். சிகிச்சைக்கான செலவுகளையும், உரிய இழப்பீடும் தருவதாகச் சொல்லி இருக்கின்றனர்,'' என்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கியதுபோல் தனக்கும் கட்சியினர் பிரம்மாண்டமான கட்அவுட்கள், தோரணங்களுடன் வரவேற்பு அளிக்க வேண்டும் என்று மறைமுகமாக உத்தரவிட்டுள்ளதாகவும், அதனால் கட்சியினர் விதிகளை மீறி கட்அவுட்டுகளை வைக்கும்போது, இதுபோன்ற அசம்பாவிதங்களும் நடப்பதாகவும் அதிமுக நிர்வாகிகள் புலம்பினர்.

attacked Electric current
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe