Published on 27/01/2022 | Edited on 27/01/2022
திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு அருகில் பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் 100 கடைகள் இயங்கி வருகின்றன. நேற்று குடியரசு தினம் என்பதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரவு அங்குள்ள எலக்ட்ரிக்கல் கடை, பிரின்டிங் பிரஸ், மோட்டார் ரீவைண்டிங், இருசக்கரப் பழுது நீக்கும் கடை, பேட்டரி விற்பனை உள்ளிட்ட 13 கடைகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளையர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவெரும்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காததால் எந்த நேரமும் இருட்டாக இருப்பதாகவும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டியிருப்பதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.