கோப்புப்படம்
சென்னை கொடுங்கையூரில் நள்ளிரவில் மர்ம நபர்கள் தாக்கி நான்கு பேரிடம் தொடர்ச்சியாக பணம், செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று நள்ளிரவு கொடுங்கையூர் பகுதி கண்ணதாசன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே மர்ம நபர்களால் லட்சுமி என்பவரிடம் செல்போன் மற்றும் 6000 ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் எருக்கஞ்சேரி சிக்னலில் சவ்கத் அலி என்பவரை கத்தியால் வெட்டி வெள்ளி செயின், வெள்ளி பிரேஸ்லெட், செல்போன் ஆகியவை பறிக்கப்பட்டுள்ளது. சிட்கோ மெயின் ரோடு பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த லாரி டிரைவர் ராதாகிருஷ்ணன் என்பவரை தாக்கி செல்போன் மற்றும் 500 ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்.ஆர்.நகரில் கொத்தனார் வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷ் என்பவரை தாக்கி செல்போன் மற்றும் கையில் இருந்த 7500 ரூபாய் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்து ஒரு மணி நேரத்தில் கைவரிசை காட்டிய அந்த மூன்று கொள்ளையர்களுக்கும் போலீசார் தற்போது வலை விரித்துள்ளனர். கொடுங்கையூரில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த தொடர் வழிப்பறி சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.