Serial Holiday Special Bus Operation

தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “வெள்ளிக்கிழமை (13/09/2024), சனிக்கிழமை (14/09/2024), ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம் (15/09/2024 ) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் 955 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று 20 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதோடு பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு முதல் செவ்வாய் வரை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.