Skip to main content

“முந்திரி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்”- எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் கோரிக்கை! 

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

"Separate Welfare Board for Cashew Workers" - MLA Saba Rajendran's request

 

முந்திரி தொழில் செய்யும் தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசனிடம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர், “நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் முந்திரி தொழிலில் ஈடுபடும் அமைப்பு சாரா உடலுழைப்பு தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இதுவரை உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் சுமார் 3,000 தொழிலாளர்கள் மட்டும் பதிவுசெய்து பயனடைந்து வருவதாக தெரிகிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முந்திரி தொடர்புடைய அனைத்து பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

 

மேலும் தமிழ்நாட்டில் முந்திரி தொடர்பான தொழிலில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் இயற்கை சீற்றத்தால் முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்து அதிகளவில் பாதிப்பு ஏற்படுவதால், முந்திரி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே மேற்கண்ட முந்திரி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, முந்திரி உடலுழைப்பு தொழிலாளர்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய, முந்திரி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குத் தனியாக ஒரு தொழிலாளர் நலவாரியம் அமைத்துத் தர வேண்டும். முந்திரியைப் பதப்படுத்தி, கொட்டையிலிருந்து முந்திரி பருப்புகளைப் பிரித்து, அதனை வியாபாரம் செய்யும் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகின்றன.  

 

அவ்வாறு செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து 0.3% செஸ் வரி வசூல் செய்தால், மேற்கண்ட நலவாரியத்துக்கான நிதி ஆதாரம் ஏற்படுத்தி, அதன் மூலம் முந்திரி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், அவர்களின் சமூக நலன் காத்திடவும் முந்திரி தொழிலாளர் நலவாரியம் அமைத்திட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

"Separate Welfare Board for Cashew Workers" - MLA Saba Rajendran's request

 

இதேபோல் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சபா. பாலமுருகன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், “பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்போது இயங்கிவரும் கட்டடம் 1962இல் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் கடந்ததால் பழுதடைந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பல்வேறு திட்ட பிரிவுகள் மற்றும் பொறியாளர் அலுவலகம் ஆகியோரது எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான இடவசதி இல்லை.

 

ஒன்றிய குழு கூட்டம் அறை மற்றும் அலுவலகக் கூட்ட அறை தனித்தனியாக இல்லாத நிலையில் இடப்பற்றாக்குறை மற்றும் பழுதடைந்த நிலையில் அலுவலகம் இயங்கிவருகிறது. கணினி வசதி உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்த போதுமான வசதிகளின்றி உள்ளது. மேலும், பல்வேறு பணிகளுக்காக அலுவலகம் வந்து செல்லும் பொது மக்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்ட அனுமதி அளித்து உதவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.