Senthil Balaji's office in Karur was sealed with a notice

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரிலும் போலீசார் அதிகப்படியாகக் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கரூர் பேருந்து நிலையம், கோவை சாலையில் உள்ள பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். எங்களது அனுமதியின்றி அலுவலகத்தைத் திறக்கக்கூடாது. சென்னையில் உள்ள எங்களது அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செந்தில் பாலாஜி சகோதரர் நடத்தி வரும் நிறுவனத்தின் அலுவலகத்திற்கும் அமலாக்கத்துறையினர் சீல் வைத்துள்ளனர்.