Skip to main content

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட திமுக எம்.எல்.ஏ. நிதி உதவி..! 

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

senji DMK MLA Masthan donated to ram temple

 

1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. ராமர் பிறந்த இடம் இங்குதான் என்றும், அங்கே ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும் விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள் என பல்வேறு அமைப்பினர் திரண்டு சென்று பாபர் மசூதியை இடித்தனர். அதனால் பெரிய கலவரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அது சம்பந்தமான வழக்குகள் மூலம் இந்தியா முழுவதும் பரபரப்பான சூழ்நிலையே நிலவி வந்தது. 

 

இப்போதும், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களிலும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அங்கே ராமர் கோயில் கட்டுவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பிரதமர் மோடி, பூமி பூஜை நடத்தினார். அதன்பிறகு ராமர் கோயில் கட்டும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. அதற்காக ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. உட்பட இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமானச் செலவுகளுக்காக இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்கள், செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் என்று பலரிடமும் வசூலித்து வருகிறார்கள். 

 

அந்த அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட பி.ஜே.பி. தலைவர் கலிவரதன், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செஞ்சி மஸ்தானிடம் சென்று ராமர் கோவில் கட்டும் பணிக்காக 11 ஆயிரம் ரூபாய் நன்கொடை பெற்றுள்ளார். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் மஸ்தானிடம் நாம் கேட்டோம். அதற்கு அவர், “நான் விவரம் அறிந்த வயதிலிருந்து பள்ளிவாசலுக்குத் தொழுகைக்குச் செல்வேன். என்னைத் தேடி வரும் இந்து மக்களுக்கும் அவர்கள் கோயிலுக்கும் உதவிகள் செய்து வருவதோடு, கோயில் திருப்பணிக்காக என்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறேன். அங்கு நடக்கும் குடமுழுக்கு திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சென்று வருகிறேன். சாதி, மதம், இனம் கடந்து அனைத்து மக்களிடமும் பழகி வருபவன் நான். இது தொகுதி மக்கள் அனைவரும் நன்கு அறிந்த விஷயம். 

 

நான், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, பொதுமக்களின் விருப்பத்திற்கிணங்க கிருஷ்ணர் கோவில் கட்டுவதற்கு பேரூராட்சியில் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. அங்கு கோவில் கட்டுவதற்கும் உதவி செய்துள்ளேன். அந்தக் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் உரியடி திருவிழாவில் தவறாமல் கலந்துகொள்வேன். அதேபோல், நாங்கள் குடியிருக்கும் புதுத்தெருவில் தரையில் இருந்த பிள்ளையாருக்கு சிறிய கோயில் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று அதையும் செய்து கொடுத்துள்ளேன். 

 

எனது தொகுதியில் இருந்து இதுபோன்று கோயில் கட்டுவதற்கு, பள்ளிக்கூடம் கட்டுவதற்கு என பொது நோக்கத்தோடு என்னைத் தேடி வருபவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வதோடு, அந்த நிகழ்ச்சிகளுக்கும் சென்று தவறாமல் கலந்துகொள்வேன். அந்த அடிப்படையில் பி.ஜே.பி. மாவட்டத் தலைவர் கலிவரதன், ராமர் கோயில் கட்ட நிதி கேட்டு வந்தார். அவருக்கு நிதி அளித்தேன். இதில் என்ன தவறு உள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு அந்த இடத்தில் கோயில் கட்டுகிறார்கள். இதற்காக என்னைத் தேடி வந்து உதவி கேட்டுள்ளார். அதை செய்துள்ளேன், இதில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. 

 

மறைந்த எங்கள் தலைவர் கலைஞர் அனைத்து மத, இன மக்களுடனும் இணக்கமாகவே இருந்து வந்துள்ளார். ஸ்டாலினும் அதே போன்று இருந்து வருகிறார். ஸ்டாலின், எந்த மதத்தினரும் புண்படாத வகையில் நடந்துகொள்வதோடு, அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார். அவர்களது தேவைகளை அறிந்து உதவிகளையும் செய்து வருகிறார். திமுக அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் சர்ச்சையோ பரபரப்போ எதுவும் இல்லை” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.