Skip to main content

அமைச்சர் பொன்முடி வீட்டில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை

Published on 18/07/2023 | Edited on 18/07/2023

 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையின் அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தினர். அதே சமயம் அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். செம்மண் குவாரி தொடர்பாக 2012 ஆம் ஆண்டு பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சோதனை நடத்தப்பட்டது.

 

அப்போது நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்குச் சென்றனர். அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு இந்தியன் வங்கி தங்க நகை மதிப்பீட்டாளர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து 13 மணி நேரச் சோதனைக்குப் பிறகு நேற்று இரவு 7:55 மணிக்கு பொன்முடி அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 3.30 மணி வரை என சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வீடு திரும்பினார். அதே சமயம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜாராக சம்மன் கொடுத்துள்ளது. மேலும் பொன்முடியின் மகனும் எம்.பியுமான கௌதம சிகாமணியிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

 

இதையடுத்து அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை குறித்த விவரங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பொன்முடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், “துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் விசாரணையை எதிர்கொள்ளுங்கள். மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும்” என அமைச்சர் பொன்முடியிடம் தெரிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே,என்.நேரு,  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சி.வி.கணேசன், சேகர்பாபு,  ரகுபதி மற்றும் சட்ட நிபுணர்கள், திமுக  நிர்வாகிகள் என பலரும் வருகை புரிந்தனர். அதனை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

Senior ministers consult at Minister Ponmudi house

இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து திமுக செய்தி தொடர்பாளர்  டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பல்வேறு எதிர்க்கட்சிகளின் கூட்டணியைக் கண்டு அச்சப்பட்டு ஏதாவது ஒரு வகையில், திமுகவிற்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமலாக்கத்துறை இந்த சோதனையை செய்திருக்கிறது. இந்த வழக்கு 2012 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்டது, அப்போதே நீதிமன்றம் இதை பெரிதாக எடுக்கவில்லை. புலன் விசாரணையும் நடைபெறவில்லை.

 

இந்த வழக்கு குறித்த பதிவை அமைச்சர் பொன்முடி தன்னுடைய வேட்பு மனுவிலே தெரிவித்து இருக்கிறார்கள். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் நேற்றைக்கு அமலாக்கத் துறையினர் திட்டமிட்டு செய்ததாகும். பாஜக தலைமையில் 36 கட்சிகள் கொண்ட கூட்டணியை அமைத்து இருக்கிறார்களே இதில் 37 வது பெரிய கட்சியாக அமலாக்கத்துறையையும் சேர்த்து அவர்களை வைத்து  கொண்டு தேர்தலில் வெற்றி பெறலாம் எண்ணத்திலேயே இதனை செய்கிறார்கள். இது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பார்த்து பாஜக எந்த அளவிற்கு அச்சப்படுகிறது என்பதை இது போன்ற நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. அமைச்சர் பொன்முடி நன்றாக இருக்கிறார். அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து பொன்முடி சிறிதும் கவலைப்படவில்லை. மகிழ்ச்சியுடன் இருக்கிறார். அமலாக்கத்துறை முன்பு ஆஜராக தயாராக இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆளுநருக்கு என் மீது பாசம் அதிகம்'-அமைச்சர் பொன்முடி பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
 'Governor has a lot of affection for me' - Minister Ponmudi's speech

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் விழுப்புரம் கூட்டத்தில் பொன்முடி பேசுகையில், 'ஆளுநருக்கு என் மேல் ரொம்ப பிடிப்பு, பாசம் அதிகம். ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சொன்னதைப்போல நான் கொஞ்சம் சமத்துவக் கொள்கை, சமதர்மக் கொள்கை இதெல்லாம் கொஞ்சம் பேசுற ஆளு. மத்த அமைச்சர்களை விட நான் தான் அவரிடம் நேரடியாக எல்லாவற்றிலும் தொடர்புடையவன். அதனால் என் மேல அவருக்கு பாசம், பற்று, பிரியம் எல்லாம் இருந்தது. உச்சநீதிமன்றத்தை தீர்ப்பு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்னை டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதற்கு பிறகு மார்ச் மாதத்தில் உத்தரவு எல்லாம் வந்த பிறகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அவர் உடனடியாக பார்த்து நான் அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று சொல்லி இருந்தால் சரி. அதைதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செய்ய வேண்டும்.

உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். ஆளுநர் பெயருக்கு நிர்வாகத்தை நடத்துபவர். கவர்னர் என்ன ஓட்டு போட்டா வந்தார். ஒரு நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மாநில அரசாங்கம் எதை சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. அதுதான் அரசியலமைப்பு சட்டம் சொல்லுவது. இன்றுகூட கேரளாவில் ஏழு அரசியலமைப்பு சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்லி கேரளாவினுடைய முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆளுநர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்ற இந்த ஒன்றிய அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

Next Story

“இந்த தீர்ப்பு எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” - அமைச்சர் பொன்முடி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

பதவியேற்புக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நிணைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாக சட்டப்பூர்வமாக இன்று (22.03.2024) அமைச்சர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன். இதனை யாரும் மறுக்க முடியாது. முதல்வருக்கும், வழக்கறிஞர்கள் இளங்கோ மற்றும் வில்சனுக்கும் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இந்த தீர்ப்பு என்பது எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.