Skip to main content

கரோனா பீதியில் மூத்த தம்பதியர் தற்கொலை! - சிவகாசி அருகே சோகம்!

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

Senior couple passes away in Corona panic! - Tragedy near Sivakasi!

 

கரோனா பயத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. சிவகாசி தாலுகாவிலுள்ள ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்த வயதான தம்பதியர், கரோனா அச்சத்தில் விஷம் அருந்தி உயிரை விட்டுள்ளனர். 

 

என்ன நடந்தது?

முத்துமணி,  பட்டாசு ஆலைத் தொழிலாளி ஆவார். இவருடைய அண்ணன் முன்பே காலமாகிவிட்டார். இவருடைய இரண்டு தங்கைகளும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். இவர்களின் அம்மா தெய்வானை (வயது 62) சர்க்கரை நோயினால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இவர் தன் கணவர் பெருமாளிடம், ‘இப்படி நோயுடன் வாழ்வதைக் காட்டிலும் செத்துவிடலாம்..’ என்று அடிக்கடி புலம்பிவந்திருக்கிறார். அப்போதெல்லாம் பெருமாள், ‘வயதாகிவிட்டாலே அப்படித்தான் இருக்கும். மருந்து, மாத்திரை சாப்பிடு. எல்லாம் சரியாகிவிடும்’ என்று ஆறுதல் கூறியிருக்கிறார். 

 

Senior couple passes away in Corona panic! - Tragedy near Sivakasi!

 

இந்த நிலையில், பெருமாள், தெய்வானை இருவருமே உடல்நலமின்றி சிரமப்பட்டுள்ளனர். ஒருவேளை கரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் வேறு இருவரையும் தொற்றியிருக்கிறது. இனி பிழைக்கமாட்டோம் என்ற எண்ணம் மேலோங்கிவிட, மகன் முத்துமணியிடம் வெளியூரில் இருக்கும் மகள்கள் இருவரையும் கூட்டி வரச்சொல்லியிருக்கின்றனர். மகள்களும் வந்து பெற்றோரைப் பார்த்து, ‘உங்களுக்கு ஒன்னும் ஆகாது. ஆஸ்பத்திரிக்குப் போவோம். எல்லாம் சரியாகிவிடும்’ என்று நம்பிக்கை ஏற்படுத்த முற்பட்டிருக்கின்றனர். பெற்றோரோ ‘ஆஸ்பத்திரி போனா ரொம்ப செலவாகும். யாருகிட்ட பணம் இருக்கு?’ என்று விரக்தியாகப் பேசியிருக்கின்றனர்.


  
இந்நிலையில், மகள் சாந்தி வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, பூச்சி மருந்து வாடை மூக்கைத் துளைத்திருக்கிறது. விழுந்தடித்து சென்றபோது, அம்மாவும் அப்பாவும் பூச்சி மருந்தைக் குடித்திருந்தனர். அந்தக் குடும்பத்தினர் தலையிலடித்துக்கொண்டு அழுதபடி, இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி, சிவகாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நிலைமை மோசமாகிவிட்டதால், அங்குள்ள மருத்துவர்கள் முதல் சிகிச்சை அளித்துவிட்டு, விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்படி சிபாரிசு செய்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முதலில் பெருமாள் இறந்துவிட, அதனைத் தொடர்ந்து தெய்வானையின் உயிரும் போய்விட்டது.

 

வயது பாரபட்சமின்றி பலரது உயிரையும் கரோனா காவு வாங்கும் நிலையில், முதியோர் தற்கொலை செய்து மாண்டுபோகும் கொடுமைகளும் நடக்கின்றன.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

வைரலான சி.சி.டி.வி.! ஓட்டல் ஓனரைக் கத்தியால் குத்திய சகோதரர்கள் கைது!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Sivakasi viral cctv police arrested two

‘பார்சல் வழங்குவதற்குத் தாமதமானதால் ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து’ என சிவகாசி – மாரனேரியில் நடந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து மாரனேரி காவல்நிலையம், ஏ.துலுக்கபட்டியைச் சேர்ந்த முனியாண்டியின் மகன்கள் மாரீஸ்வரன் மற்றும் பாண்டீஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்தது.

ஜெகநாதன் என்பவர் ஆலங்குளம் சாலையில் ஜே.ஜே. ஓட்டல் நடத்துகிறார். அவருடைய ஓட்டல் தொழிலுக்கு உதவியாக மகன்கள் கரிமால், ராஜேஸ் கண்ணன், வாசுதேவன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இரவு 8 மணியளவில், மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் அந்த ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்கச் சென்றனர். அப்போது ராஜேஸ் கண்ணன் ஓட்டலுக்குள் செல்லும்போது தெரியாமல் இடித்துவிடுகிறார். உடனே இருவரும்  “பார்த்துப் போகவேண்டியதுதானே..” என்று ராஜேஸ் கண்ணனைக் கெட்ட வார்த்தையால் திட்டுகின்றனர். கரிமாலும் ஓட்டலில் இருந்தவர்களும் இருவரையும் சத்தம்போட,  “உங்களை வந்து வச்சிக்கிறோம்.” என்று சென்றுவிட்டனர்.

அடுத்த 15 நிமிடங்களில் மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் மீண்டும் ஓட்டலுக்கு வந்து வாசுதேவனைக் கத்தியால் குத்தினார்கள். அப்போது கரிமாலும் வாசுதேவனும் பிடிக்க முயன்றபோது, வாசுதேவனுக்கு கையில் காயமேற்பட்டது. கரிமாலும் ஓட்டலில் இருந்த மற்றவர்களும் கத்தி வைத்திருந்த சகோதரர்களுடன் மல்லுக்கட்டியபோது “எங்கள பகைச்சுக்கிட்டா கத்தியால குத்தி கொன்றுவிடுவோம்..” என்று மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் கரிமால் அளித்த புகாரின் பேரில், மாரனேரி காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து இருவரையும் தேடிவந்தது. தற்போது மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் கைதாகியுள்ளனர்.