Published on 06/08/2022 | Edited on 06/08/2022

தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசால் கடந்த ஆண்டு முதல் தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டுவருகிறது.
கடந்த ஆண்டு இந்த விருது முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'தகைசால் தமிழர்' விருது பெறும் விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.