குடியைக் கெடுக்கும் குடியால் குற்றத் தன்மையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகரிலிருப்பவர் இசக்கியம்மாள் (72) கணவர் ஆறுமுகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே காலமாகிவிட்டதால், தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மூவருக்கும் திருமணமாகி தனித்தனியேக் குடியிருக்கின்றனர்.
இவர்களில் கடைசி மகனும், டெய்லருமான மாரியப்பனுக்கு இரு மகன்கள். அதில் ஒருவர் இறந்து விட்ட நிலையில், இவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்துப் பெற்றுச் சென்றுவிட, மாரியப்பன் தன் தாய் இசக்கியம்மாளுடன் சேர்ந்து வசித்து வந்திருக்கிறார். இசக்கியம்மாளுக்கு சிறிதளவு இடம் உள்ளது. குடிகார மகனாகிய மாரியப்பன் அதனை தனக்கு எழுதித் தரும்படி தாயிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்திருக்கிறான். ஆனால் இசக்கியம்மாள் எழுதித் தர முடியாது என திட்டவட்டமாக மறுத்திருக்கிறாராம்.
இந்த நிலையில் நேற்று காலை அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு வந்த மாரியப்பன் இடத்தைக் கேட்டுத் தகராறு செய்திருக்கிறான். இசக்கியம்மாள் மறுக்கவே, போதை வெறியில் பெற்ற தாய் என்றும் பாராமல் சவுக்குக் கட்டையால் இசக்கியம்மாளை சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியிருக்கிறான். ரத்த வெள்ளத்தில் அலறித்துடித்த இசக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் உள்ளிட்ட போலீசார் உடலைக் கைப்பற்றி நகர அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மாரியப்பனைத் தேடி வருகின்றனர். போதையின் வெறி, தாய் என்றும், தாரம் என்று கூட ஈரம் காட்டுவதில்லை.