Selva Perundurai condemned TN women kabaddi players were beaten Punjab

பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் சார்பாக வீரர், வீராங்கனைகளை கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே நடைபெற்ற கபடிப் போட்டியின் போது நடுவர்கள் மற்றும் இரண்டு அணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது நடுவர் திடீரென தமிழக வீராங்கனைகளை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Advertisment

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, “பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் தர்பாங்கா பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களிடையே கபாடி போட்டியின் போது ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதைக் கண்டித்து கேள்வி எழுப்பிய தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

Advertisment

இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் தமிழ்நாட்டின் கபாடி பயிற்சியாளரை கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு, நம் மாநில விளையாட்டு வீரர்களை பாதுகாக்க வேண்டுமெனவும், பஞ்சாபில் இருந்து அவர்களை பத்திரமாக அழைத்து வரவேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனிடையே தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்படவில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரிக்கவே பஞ்சாப் காவல்துறை அழைத்துச் சென்றதாக தெரிவித்திருக்கிறார்.

Advertisment