Skip to main content

“மு.க.ஸ்டாலின்.. முகத்தை எங்கே வைத்திருந்தார்?” -சீரியஸ் + காமெடி = செல்லூர் ராஜு!

Published on 03/11/2019 | Edited on 03/11/2019

மதுரையில்  இன்று  தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.

“கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடுகளை முதலில் கண்டுபிடித்தது நாங்கதான். முதல்ல புகார் கொடுத்தோம். சம்பந்தப்பட்டவங்க மீது கடுமையா நடவடிக்கை எடுத்திருக்கோம். ஸ்டாலின் இடைத்தேர்தல் குறித்து சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் எல்லாம் அரசியலுக்காகத்தானே தவிர உண்மையல்ல. திமுகதான் திருமங்கலம் ஃபார்முலான்னு கொண்டு வந்தது. நாடே சிரித்தது. ஊடகங்களெல்லாம் கேலி பண்ணியது. அன்றைக்கு இந்த மு.க.ஸ்டாலின் எங்கே போயிருந்தார்? முகத்தை எங்கே வைத்திருந்தார்? இவங்க ஆட்சிக்காலத்துல தேர்தல் எப்படி இருந்தது? ரவுடித்தனம்.. மக்களை பயமுறுத்தி ஓட்டு வாங்கினாங்க. இங்கே அப்படி இல்ல. எடப்பாடியார் ஜனநாயகத்தைக் காத்துக்கொண்டிருக்கிறார். துணை முதலமைச்சர் துணையிருக்கிறார்.

 

sellurraju interview

 

அமைச்சரவை மாற்றம்கிறது முதலமைச்சர் கையில் இருக்கிறது. முதலமைச்சர் நினைத்தால் எப்ப வேணும்னாலும் மாற்றலாம். யாரை வேணும்னாலும் எடுக்கலாம். அவர் பார்த்து எதுவும் பண்ணலாம். அது அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டது. முன்னால அம்மா வந்து உடனுக்குடனே யாரையும் மந்திரில இருந்து மாற்றிவிடுவார். எம்.ஜி.ஆர். காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் அவர்கள் மக்களுடைய ஆளுமை மிக்கவர்கள். மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள். அவர்களுக்கு எது நல்லது? எது கெட்டது? என்று தெரியும். ஜெயலலிதாவுக்கு ஒருவர் குறித்து தவறானவர் என்று தகவல் வந்தால், அதைக்கேட்டு நடவடிக்கை எடுப்பார். ஜெயலலிதா யாரையும் உடனே எடுத்தது கிடையாது. யாரு தவறு பண்ணுனாலும் அவங்ககிட்ட விளக்கம் கேட்டு, அவங்க திருப்தியா சொன்னாங்கன்னா விட்ருவாங்க. திருப்தியா சொல்லலைன்னா நடவடிக்கை எடுப்பாங்க. ஜெயலலிதா காலத்துலயும் அப்படித்தான். இப்பவும் அப்படித்தான் நடக்குது.

ரஜினியைப் பொறுத்தமட்டிலும் ஒரு நல்ல மனம் படைத்தவர். மனசுக்கு பட்டதை சொல்லக்கூடியவர். அவருக்கு இன்றைக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது தந்திருக்கிறது. அவருக்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் ரசிகன் இல்லியா? என்னுடைய சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

“ஜெயலலிதா வந்து உடனுக்குடனே யாரையும் மந்திரில இருந்து மாற்றிவிடுவார்.” என்று முதலில் சொல்லிவிட்டு, தான் சொன்னதை மறந்தவராக “ஜெயலலிதா யாரையும் உடனே எடுத்தது கிடையாது.” என்று அதே பேட்டியில் பல்டி அடித்தார்.  பேட்டியினூடே “தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள்; தெளிந்தவர்கள்; அறிவில் தெளிவோடு இருக்கிறவர்கள்.” என்று கூறி சிரித்தார்.  

வைகை அணை நீர் ஆவியாவதைத் தடுக்க தண்ணீரின் மேல் பரப்பில் தெர்மாகூல் அட்டைகளை மிதக்க விட்டவராயிற்றே! தெளிவாகப் பேட்டி அளிக்கவில்லையோ என்ற சந்தேகம் அவருக்கே வந்துவிட்டதோ, என்னவோ? “நான் பேசியது தெளிவா புரிஞ்சிதா? மக்களுக்கு இதை தெளிவா சுட்டிக்காட்டுங்க..” என்று ஊடகத்தினரிடம் கேட்டுக்கொண்டார் படு உஷாராக!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.