
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த பொதுக்குழுவில் பல அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு முதல்வர் ஸ்டாலின் பேருரையாற்றினார். இந்த நிலையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “மதுரைக்கு எதுவும் செய்யாமல் வந்திருக்கிறார் முதல்வர். லட்சக்கணக்கான மக்கள் கூடியதாக சொல்கிறார்கள். ஆனால், வந்தவர்கள் தானா சேர்ந்த கூட்டம் இல்லை, அழைத்துக் கொண்டு வந்த கூட்டம். நம்ம முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று மக்கள் யாரும் தன்னெழுச்சியாக செல்லவில்லை. 30-40 ஆயிரம் மட்டும்தான். அதுலேயும் பாதிபேர் போய்விட்டனர். ரோடு ஷோ, பொதுக்குழு எல்லாம் முடிந்துவிட்டது ஆனால் இன்னும் பேரிகார்டுகளை அகற்றவில்லை. முதல்வர் வரும்போது போக்குவரத்தை நிறுத்துவது சகஜம் தான். 3 மணிநேரம் நிறுத்திட்டாங்க. தொகுதிக்கு 10 கோரிக்கைகள் முதல்வர் கேட்டார் நாங்களும் கொடுத்தோம், எதையும் நிறைவேற்றவில்லை.
மதுரையிலுள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் நினைக்கவில்லையே. மக்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கானோர் கூடியிருப்பார்கள், இன்னொரு சித்திரைத் திருவிழாவாக அமைந்திருக்கும். மதுரைக்கு அதிமுக என்னென்ன செய்தது என நாங்கள் பட்டியலிட தயார். பொது விவாதத்துக்கு தயார். நீங்கள் தயாரா? முதல்வர் வரும் கார் கூட மேடுபள்ளத்தில் வரக்கூடாது என்பதற்காக புது சாலை அமைத்தனர். பந்தல்குடி கால்வாயில் ஒரு பக்கம் இஸ்லாமியர், இன்னொரு பக்கம் பட்டியலின மக்கள் வசிக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் கால்வாயை சரி செய்ய இரண்டேகால் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் வகுத்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதனை கைவிட்டனர். தலைவர் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது 1971ல் மட்டுமே மீண்டும் ஆட்சியமைக்க முடிந்தது.
அதன்பின், எம்.ஜி.ஆர் விலகி அதிமுகவை தொடங்கியதில் இருந்து, ஒருமுறைக்கு மறுமுறை திமுக ஆட்சிக்கு வந்ததேயில்லை. 1977ல் மதுரையில் பொதுக்குழு நடத்தினர், அடுத்த 12 ஆண்டுகள் வனவாசம் போய்விட்டார்கள். அதுபோலவே இப்போதும் மதுரையில் பொதுக்குழு கூட்டியுள்ளனர், மீண்டும் வனவாசம் செல்லவுள்ளனர். யாரோ முதல்வரை ஏமாற்றி மதுரையில் பொதுக்குழு நடத்த வைத்திருக்கிறார்கள். மதுரையில் பொதுக்குழு நடத்தி தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டது திமுக எனத் தெரிவித்துள்ளார்.