Skip to main content

7 வயது சிறுமியை 10 லட்சம் ரூபாய்க்கு விற்ற பெற்றோர் கைது; வாங்கிய தொழில் அதிபரும் சிக்கினார்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

selling 7-year-old girl for Rs 10 lakh-incident in salem

 

சேலத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு 7 வயது சிறுமியை விலைக்கு வாங்கிய தொழில் அதிபர் மற்றும் குழந்தையை விற்ற பெற்றோர் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு. சேலம் நகர மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், அன்னதானப்பட்டியில் வசித்து வரும் தன் மகள் சுமதி, சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணன் (54) என்பவருக்கு தனது 7 வயது பேத்தியை விற்றுவிட்டதாகவும், விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியிருந்தார்.

 

இதுகுறித்து விசாரித்த காவல்துறையினர், முதற்கட்டமாக தொழில் அதிபரின் வீட்டில் இருந்த சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது ஒருபுறம் இருக்க, சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தாயார் சுமதி, உறவினர் ஒருவருடன் பேசும் குரல் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது.

 

selling 7-year-old girl for Rs 10 lakh-incident in salem

 

அந்த உரையாடலில் சுமதி, தன் மகளை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டதாகவும், பணத்தைத் தன்னுடைய வங்கிக் கணக்கில் போட்டுள்ளதாகவும், அந்த தொழில் அதிபர் மகளை நல்லபடியாக பார்த்துக்கொள்வார் என்றும் கூறுகிறார். இந்த உரையாடல் குறித்தும் காவல்துறையினர் விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

 

சிறுமியை வாங்கிச் சென்ற தொழில் அதிபர் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி இறந்துவிட்டார். மகன்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவருடைய வீட்டில்தான் சுமதி வேலை செய்து வந்துள்ளார்.

 

சுமதியின் 7 வயது மகளைத் தன்னுடனேயே வைத்து வளர்க்க விரும்புவதாகவும், அதற்காக பணம் தருவதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வறுமையில் இருந்த சுமதியும், அதற்கு ஒப்புக்கொண்டார். அதன்பிறகே சிறுமியை தொழில் அதிபருடன் அனுப்பி வைத்திருக்கிறார். இதற்காக 10 லட்சம் ரூபாய் சுமதிக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், குழந்தையை வாங்கிச்சென்ற கிருஷ்ணன், சுமதி, இவருடைய கணவர் சதீஷ்குமார் ஆகியோர் மீது குழந்தையை விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்து, மூவரையும் மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இதுகுறித்து சிறுமியின் பாட்டி சின்னப்பொண்ணு செவ்வாய்க்கிழமை (ஏப். 13) கூறுகையில், ''என் மகளும், பேத்தியும் ஆரம்பத்தில் என்னுடன்தான் தங்கியிருந்தனர். பின்னர் மகள், வீட்டு வேலைக்காகச் செல்லும்போது பேத்தியையும் உடன் அழைத்துச் செல்வார். சில நாட்கள் சுமதி மட்டும் வீட்டுக்கு வந்துவிடுவார். மகள் எங்கே என்று கேட்டால், வேலை செய்யும் இடத்திலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். அங்கேயே தூங்குகிறாள் என்று சமாளித்து வந்தார்.

 

இந்நிலையில்தான் என் பேத்தியைப் பல நாட்களாக வீட்டுக்குக் கூட்டி வராததால் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, பேத்தியை கிருஷ்ணனுக்கு விற்றிருப்பது தெரிய வந்தது. பேத்தியைத் தேடி கிருஷ்ணன் வீட்டுக்குப் போனால், குழந்தையைப் பார்க்க அனுமதிக்க மறுத்து துரத்திவிடுவார். பேத்தியை கோவா, ஏற்காடு என பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருப்பதும் தெரிய வந்தது.

 

அதன் பிறகுதான் காவல்துறையில் புகார் அளித்தேன். சைல்டு லைன் மூலம் மூன்று நாளைக்கு முன்பு என் பேத்தியை மீட்டுக்கொடுத்தனர். என் பேத்தியும், 10 வயதான மற்றொரு பேத்தியும் இப்போது காப்பகத்தில் உள்ளனர். இரண்டு குழந்தைகளையும் என்னுடன் அனுப்ப வேண்டும். நானே அவர்களை நன்றாக வளர்த்து ஆளாக்கிவிடுவேன். இதுகுறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்” என்றார்.

 

இச்சம்பவத்தில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.