Skip to main content

“ஈரோட்டில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு” - அமைச்சர் முத்துசாமி

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

"Selection of a place to set up a technology park in Erode." - Minister Muthuswamy

 

ஈரோடு மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அனைத்து திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவிற்கு ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.  அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

 

அதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாணவிகளுக்கான 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று 2-வது கட்டமாக 2,169 மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருமுறை வழங்கப்பட்டதை சேர்த்து 6,310 பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 

 

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் முழு அளவில் பணிகள் நிறைவடைந்து விட்டது. 6 பம்பிங் ஸ்டேஷனுக்கு தண்ணீர் ஏற்றி குளங்களுக்கு அனுப்பும் பரிசோதனை நிறைவு பெற்றது. 6-வது பம்பிங் ஸ்டேஷனிலிருந்து அடுத்து வரும் 18 கிலோமீட்டர் பிரதான குழாயில் பரிசோதனை நிறைவடைந்துவிட்டது. சில இடங்களில் மட்டும் சின்ன சின்ன குறைபாடுகள் உள்ளன. அதை சரி செய்து வருகிறோம். 1,048 குளங்களுக்கும் தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தி உள்ளோம். சில இடங்களில் மட்டும் நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதால் அந்த இடங்களுக்கான பணிகள் மட்டும் தாமதம் ஆகிறது. அதனால் பிரதான பணிகளுக்கு எதுவும் பாதிப்பு இல்லை. அந்த இடங்களிலும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி முக்கிய பணிகளை நிறைவு செய்துவிட்டோம். முழு பணிகள் நிறைவடைந்த உடன் முதலமைச்சரிடம் இது குறித்துப் பேசி அனுமதி கேட்டு திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

 

ஈரோடு மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா சித்தோடு அருகே ஐ.ஆர்.டி.டி கல்லூரி வளாகத்தில் தொடங்குவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கீழ்பவானி கான்க்ரீட் திட்ட எதிர்ப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தோம். மேலும் 4 நாள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் அந்தத் திட்டத்தை இப்போதும் எதிர்க்கிறார்கள். அதில் ஒரு சிலர் மட்டும் சில பணிகளை மேற்கொள்ளலாம் என்று சொல்லி உள்ளனர். இதற்கிடையே இது சம்பந்தமாக வரும் 28 ஆம் தேதி நீதிமன்ற தீர்ப்பு வர உள்ளது. அந்த தீர்ப்பை பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.