Skip to main content

"தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்" - அமைச்சர் சேகர்பாபு

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

sekarbabu talks about palani murugan temple

 

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவிற்கான திருப்பணிகள் கோவில் நிர்வாகத்தால் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பழனி கோவிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். படிப்பாதை வழியாக மலையேறிச் சென்று அமைச்சர் சேகர்பாபு படிப்பாதையில் உள்ள கோயில்களில் செய்யப்பட்டுள்ள குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மலை மீது அமைந்துள்ள ராஜகோபுரம் மற்றும் தங்ககோபுரம் திருப்பணிகளையும், குடமுழுக்கு ஏற்பாடுகளையும் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், குடமுழுக்கு விழாவிற்காக மலை மீது அமைக்கப்பட்டுள்ள யாகசாலைகள் மற்றும் பக்தர்களின் தரிசனத்திற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். 

 

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, "பழனி மலையடிவாரத்தில் பக்தர்கள் கும்பாபிஷேகத்தைப் பார்ப்பதற்காக எல்.இ.டி திரைகள் 16 இடங்களில் பொருத்தப்பட உள்ளது. கும்பாபிஷேகம் அன்று ஹெலிகாப்டர் மூலம் கலசத்திற்கு மலர் தூவப்பட உள்ளது. குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு தமிழில் மந்திரங்கள் ஓதப்படும். மேலும், பழனி கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பலரும் ஆர்வமாக உள்ளதாகவும், விழாவில் கலந்துகொள்ள 47000 பேர் இதுவரை இணையவழியில் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த நபர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 3000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்" என்று கூறினார்.

 

இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், கோயில் இணை ஆணையர் நடராஜன் உட்பட அறங்காவலர் குழுவினரும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆறுதலுக்கு வராத பிரதமர், ஆதாயத்திற்கு மட்டும் வருகிறார்' - அமைச்சர் சேகர்பாபு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Why is the prime minister coming six times this year alone?'-Minister Shekharbabu

'மக்கள் துயரத்தில் இருக்கும் பொழுது ஆறுதல் சொல்ல வக்கில்லாத பிரதமர், இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை தமிழகத்திற்கு வந்திருக்கிறார்' என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''இன்று ஒரு சில தலைவர்கள் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்துவிட்டு, ஏதோ தமிழ்நாட்டில் தொடர்ந்து பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து தமிழக மக்களுக்கு உழைத்தது போலவும், தமிழக மக்களுக்கு நன்மை செய்தது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் என்பதால் சற்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை கொள்கை என்பது அண்ணா சொன்னது போல இடுப்பில் கட்டிய வேட்டி தான். பதவி என்பது தோளில் போட்டுக் கொண்ட துண்டு தான்.

இயக்கத்திற்காகவும், இயக்கத்தின் தலைவருக்காகவும் எதை வேண்டுமானாலும் இழப்பதற்கு தயாராக இருக்கின்ற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த மேடையில் நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மக்களுடைய துயரம் களைவதற்கு, துன்பப்படுகின்ற மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு தமிழகத்திற்கு வருவதற்கு வக்கில்லாத பாரத பிரதமர், அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆண்டு மட்டும் ஆறு முறை வந்திருக்கிறார். இன்னும் இரண்டு முறை இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் வருவதாக இருக்கிறார்.

நான் பாஜகவினருக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சொல்வது என்னவென்றால் உங்களுடைய பாரத பிரதமர் தண்ணீருக்கு கீழ் தவம் இருந்தாலும் சரி, தரையின் மீது தவம் இருந்தாலும் சரி, அல்லது ஓடுகின்ற வாகனத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி, பறக்கும் விமானத்தின் மீது அமர்ந்து தவம் இருந்தாலும் சரி தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும். அந்த வெற்றியை தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிப்போம்'' என்றார்.

Next Story

'தமிழக மக்கள் மோடியை வஞ்சிக்க தயார்' - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
MODI

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருப்பூர், தூத்துக்குடி வந்திருந்த பிரதமர் மோடி நேற்று (04-03-24) ஒருநாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். அதன்படி சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி கல்பாக்கம் அதிவேக ஈனுலை மின் உற்பத்தியின் தொடக்கப் பணிகளைப் பார்வையிட்டார்.  இதனையடுத்து பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக நந்தனம் புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் பாஜகவின் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்  ‘நான் தமிழகம் வருவது சிலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. எனக்கும் தமிழகத்திற்கும் இடையேயான உறவு மிகவும் பழமையானது. தமிழகத்தில் பாஜக வலுப்பெற்று வருவது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. சென்னையில் மழை வெள்ளநீர் மேலாண்மையை தி.மு.க. அரசு சரிவர செயல்படுத்தவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாலும் தேனும் ஓடுவதாக தி.மு.க. தெரிவித்துக் கொண்டிருந்தது. தி.மு.க. குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம். இது மோடியின் உத்தரவாதம். மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டு மீண்டும் மக்களுக்கே கொடுக்கப்படும். மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்வதால் திமுகவால் கொள்ளையடிக்க முடியவில்லை. குடும்பக் கட்சிகள் ஆண்ட காலத்தில் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் இல்லை'' என பேசியிருந்தார்.

'Tamil people are ready to deceive Modi'- Minister Shekharbabu interview

இந்தநிலையில் சென்னையில் நடந்த 'மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் மோடியின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''நரேந்திர மோடி அவருடைய கட்சி நோட்டாவிற்கு இணையாக வாக்குகள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் மாதம் ஒரு முறையாவது தமிழகத்திற்கு வந்து கொண்டே இருக்கிறார். இந்த ஆண்டு வரையில் இது ஆறாவது முறையாக தமிழகத்திற்கு ஒரு பிரதமர் வந்து கொண்டிருக்கின்றார். யாருக்கு வயிற்றில் புளியை கரைத்து கட்சியை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தமிழகத்திற்கு தொடர்ந்து வருகிறாரோ? அவருக்கு தான் திமுகவும்,  திராவிட மாடல் ஆட்சியும் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறது என்பது எங்களுடைய கருத்து. நம்மிடம் இருந்து பெறப்படுகின்ற வரியில் இருந்து அவர்கள் திரும்பி கொடுக்கும் சதவிகிதத்தை பார்த்தால் நாம் அளிக்கிறது 100 என்றால், 25 சதவீதம் அளவிற்குதான் அவர்கள் திரும்பி நலத்திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் அளிக்கிறார்கள்.

ஒரே ஒரு கேள்வி அவர்களை பார்த்து கேட்பது என்னவென்றால் இத்தனை முறை வருகின்ற பிரதமர் வெள்ளத்தால் சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும், தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட போதும் கூட ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத பிரதமர் தமிழகத்திற்கு இத்தனை முறை வருவது அவருடைய அரசியல் லாப நோக்கத்திற்காகத்தானே?  அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய துயர் துடைப்பதற்கு இதுவரை ஒரு சல்லிக்காசு கூட நிவாரண நிதியாக தமிழகத்திற்கு வழங்காமல் வஞ்சிக்கின்ற பிரதமரை நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் வஞ்சிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்'' என்றார்.