
புகையிலை போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் கடலூர் மாவட்டம் வடலூரில் புகையிலைப் பொருட்கள் தாராளமாகப் புழங்குகிறது. இதனால் வடலூர் போலீசார் புகையிலைப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது, எங்கெல்லாம் விற்பனை செய்யப்படுகிறது? என்று தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார் வடலூர் சிட்கோ தொழிற்பேட்டை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பார்சல் உடன் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பின் தொடர்ந்தனர். பெரியா குறிச்சியில் சரவணன் (56) என்பவரின் பெட்டிக்கடையில் பார்சலை கொடுத்தார் அந்த நபர். உடனே போலீசார் மடக்கிப் பிடித்து பார்சலை திறந்து பார்த்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தன.
போலீசார் நடத்திய விசாரணையில் புகையிலைப் பொருட்களைக் கொண்டு வந்தவர் வடலூர் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த காளைசாமி மகன் வேல்முருகன்(50) என்பது தெரிய வந்தது. அதையடுத்து வேல்முருகனையும் வியாபாரியான சரவணனையும் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து வேல்முருகன் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, வீட்டில் இருந்த ரூ 2.50 லட்சம் மதிப்பிலான 7 மூட்டைகளில் இருந்த புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.