Skip to main content

வெளி மாவட்டங்களுக்கு கடத்துவதற்கு பதுக்கி வைக்கப்பட்ட மணல் குவியல்கள் பறிமுதல்

Published on 27/04/2018 | Edited on 27/04/2018


 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் உள்ள இலுப்பூர்  மற்றும் விராலிமலை தாலுகாவில் ஓடும் கோரையாறில் பல வருடங்களாக அனுமதியின்றி மணல் கடத்தல்கள் நடந்துவருகிறது. இதனை தடுக்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் ரோந்து செல்வதும் மணல் அள்ளுவோர் தப்பியோடுவதும் தொடர்கதையாகி வந்தது.
 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரின் மணல் திருடிய லாரிகள் பிடிபட்டது. ஆனாலும் மணல் திருட்டு தொடர்ந்துள்ளது.இந்நிலையில் கோரையாற்றில் திருடப்பட்ட மணல் இலுப்பூர் தாலுகா வளதாடிப்பட்டி பகுதியிலும், விராலிமலை தாலுகா சூரியூர் பகுதியிலும் குவிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பல முறை அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர். அதன் பிறகு  அப்பகுதியில் இலுப்பூர் ஆர்டிஓ ஜெயபாரதி  காலை முதல் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டார்.
 

 

அப்போது வளதாடிப்பட்டியில் நான்கு இடங்களிலும், சூரியூரில் ஒரு இடத்திலும் தனியார் பட்டா நிலம், புறம்போக்கு நிலம், குளக்கரை ஆகியவற்றில் ஆற்றுமணல் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   இதையடுத்து சுமார் நூறு யூனிட் அளவுள்ள ஐந்து மணல் குவியல்களுக்கும் சீல் வைத்தார். இதையடுத்து இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் கொண்டு டிப்பர் லாரிகளில் மணல் குவியல் இலுப்பூர் ஆர்டிஓ அலுவலகம் கொண்டுவரப்பட்டது. இலுப்பூர் தாசில்தார் சோனைகருப்பையா, இலுப்பூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி உள்ளிட்ட அலுவலர்கள்உடனிருந்தனர்.
 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கறம்பக்குடி ஒன்றியத்தில் அய்யங்காடு கிராமத்தில் அதிமுக பிரமுகரின் மணல் கடத்தல் லாரியை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்து 12 மணி நேரத்திற்கு பிறகு புதுக்கோட்டை சார் ஆட்சியர் கே.எம்.சரயுவிடம் ஒப்படைத்தனர். அன்று பொதுமக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை மணல் கடத்தல் கும்பல் மிரட்டியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டததில் அறந்தாங்கி பகுதியில் லாரிகளை கண்டுகொள்ளாமல் விடும அதிகாரிகள் மாட்டு வண்டிகளை மட்டும் பிடிப்பதாக நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.