Skip to main content

ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் தமிழர் நிலத்தில் அறப்போர் வெடிக்கும்; சீமான் எச்சரிக்கை

Published on 31/01/2019 | Edited on 31/01/2019

திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கெதிராகப் போராடியவர்களை அத்துமீறிக் கைது செய்வதா? ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் தமிழர் நிலத்தில் அறப்போர் வெடிக்கும் என  நாம் தமிழர் கட்சி  சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

"திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 494 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பினையும், கடும் கோபத்தினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

Seeman warning

 

மத்தியில் ஆண்ட தேசியக் கட்சிகளின் பாராமுகத்தாலும், கர்நாடக அரசின் முரட்டுப் பிடிவாதத்தாலும் 30 ஆண்டுகளுக்கு மேலாகக் காவிரி நதிநீர் முற்றிலும் மறுக்கப்பட்டு தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கியக் காவிரிப்படுகை முழுக்க இன்றைக்குத் தரிசாக மாறிக்கிடக்கிறது. மெல்ல, மெல்ல அந்நிலம் வேளாண்மையைவிட்டு நகர்ந்து மாற்றுத் தொழிலை நோக்கிப்போய்க் கொண்டிருக்கிறது. இத்தகையச்சூழலில் அங்கு கஜா புயல் ஏற்படுத்தியப் பேரழிவு பத்தாண்டுகளுக்குப் பின்னால் அம்மண்ணின் மக்களை இழுத்துச் சென்றிருக்கிறதென்றால் அது மிகையல்ல.இவ்வாறு துயரமும், துன்பமும் கலந்த வாழ்வியலுக்கு மத்தியில் காவிரிப்படுகை மக்கள் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கிற தற்காலச் சூழலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியிருப்பது எதன்பொருட்டும் மன்னிக்கவே முடியாதப் பச்சைத்துரோகம்.

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைத்து அம்மண்ணையும், நீரையும், சூழலையும் முழுமையாக நாசப்படுத்திய, அதற்கெதிராக நடந்த அறவழிப்போராட்டத்தில் 14 உயிர்களை காவு வாங்கிய வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழகத்தின் இன்னொரு பகுதியில் நிலத்தையும், வளத்தையும் சுரண்டுவதற்கு அனுமதி அளிக்கிறார்களென்றால் இது மக்களின் உணர்வுகளைத் துளியும் மதிக்காத சர்வாதிகாரப்போக்காகும். ஒரு சனநாயக நாட்டிற்கான அழகு என்பது அம்மண்ணின் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, உரிமைக்குச் செவிசாய்ப்பதே. ஆனால், இங்கு மண்ணின் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களது ஒப்புதலின்றி வலுக்கட்டாயமாக நிலத்தைப் பறித்து வளத்தைச் சுரண்ட முற்படுகிறார்கள் என்பது கொடுமையானச் சர்வாதிகாரம்.

 

இம்மண்ணும், நீரும் நமக்கானதல்ல! நாளைய தலைமுறைக்கானது எனும் இயற்கையின் இயங்கியலை உட்செரித்துக் கொண்ட மக்கள் அவற்றிற்கு ஒரு பங்கம் விளையும்போது அதற்கெதிராய் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள் எனும் உலகநியதியின் பாற்பட்டு உலகம் முழுதும் நிகழும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் போலவே திருக்காரவாசல் மக்களும் தங்களது நிலமீட்புப் போரை முன்னெடுத்திருக்கிறார்கள். அவ்வாறு முன்னெடுத்தவர்களைக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலையை எட்டிய நாடுகளுக்கு மத்தியில் அறவழியில் போராடி விடுதலை பெற்ற நாடாகப் போற்றப்படும் இந்நாட்டில், அறவழியில் போராடும் மக்கள் கைது செய்யப்படுவது என்பது இந்நாட்டின் அடிப்படைச் சனநாயகக் கோட்பாடுகளுக்கே எதிரானது.

 

எண்ணெய் வளத்திலும், எரிகாற்று வளத்திலும் உள்நாட்டிலே தன்னிறைவு பெறத் துடிக்கும் இந்தியப் பேரரசு, இந்திய மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியிலும், நீர் தேவையிலும் தன்னிறைவு பெறுவதற்கு என்ன திட்டத்தை முன்வைத்திருக்கிறது எனும் எளிய கேள்விக்கு நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடம் என்ன பதிலுண்டு? உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்காற்றும் வேளாண்மையை அழித்துவிட்டு, வேளாண் நிலங்களைப் பிளந்து எரிகாற்று எடுத்துவிட்டு யாருக்கு வளர்ச்சியை அளிக்கப் போகிறார்கள்? புவி வெப்பமாதலைத் தடுக்கும்பொருட்டு பூமிக்கடியிலுள்ள வளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு மாற்று எரிபொருள் வளத்தை நோக்கி உலகம் முழுவதும் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசு மேற்கொள்ளும் இவ்வகை நடவடிக்கைகள் யாவும் இயற்கைக்கு எதிரானதில்லையா? இயற்கைக்கு ஒவ்வாத நடவடிக்கைகள் மேற்கொண்டு அதனைச் சிதைத்து அழிப்பது தான் இவர்கள் கூறும் வளர்ச்சியா? தேசப்பிதா காந்தியடிகளால் வேளாண் நாடு எனப் போற்றப்பட்ட இந்நாட்டில் வேளாண்மையை வளர்த்தெடுப்பதுதான் ஆகச் சிறந்த வளர்ச்சித் திட்டம் எனும் அறிவியல் உண்மை நாட்டை ஆளும் கார்ப்பரேட் மூளைகளுக்கு உரைக்காமல் போனது ஏனோ? எனும் தார்மீகக் கேள்விகள் மக்கள் மனங்களில் எழுகிறது

 

 

மத்தியில் ஆளும் பாஜக அரசானது, வளர்ச்சி எனும் ஒற்றைச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு இயற்கையைச் சீரழித்திடும் அபாயகரமான திட்டங்களைத் தொடர்ச்சியாகத் தமிழர் மண்ணில் திணித்து வருவதும், அதற்குத் தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசும் துணைபோய் கொண்டிருப்பதும் வரலாற்றுப் பெருந்துரோகம். இதற்கான எதிர்வினையை எதிர்காலத்தில் அவர்கள் பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆகவே, இனியாவது மண்ணின் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, மனச்சான்றின்படி திருக்காரவாசலில் கைதுசெய்யப்பட்டுள்ள மண்ணின் மக்களை எவ்வித வழக்குமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அந்நிலத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றை எடுக்கிறத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் தைப்புரட்சி போல தமிழர் நிலத்தில் மீண்டுமொரு அறப்போர் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்."என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

‘கரும்பு விவசாயி’ சின்னம் பெற்ற வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையே தேர்தல் சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த ‘கரும்பு விவசாயி’ சின்னம் இந்த தேர்தலில் கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் அக்கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் வழங்கப்பட்டது.

Rejection of the nomination of the candidate with the sugarcane farmer symbol

இத்தகைய சூழலில் திருவள்ளுர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் கந்தன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி சார்பில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கந்தனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் சுட்டிக்காட்டி கந்தனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரபு சங்கர் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சியின் வேட்பாளர் கந்தனின் வேட்பு மனுவை நிராகரித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.