Skip to main content

’’மொத்த ஆட்டத்தையும் நிறுத்தினால் எப்படி?’’ - சீமான் ஆவேசப் பேட்டி

Published on 28/05/2019 | Edited on 28/05/2019

 


மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:

’’இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி தான் கிடைத்துள்ளது.  சாதாரண குடிமக்களாக பிறந்து உண்மையான அரசியலை கொண்டுவந்து புரட்சிகரமான அரசியலை செய்து வருகிறோம்.

தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. வலைத்தளங்களில் நீங்களே காண்கின்றீர்கள்.  கடைகளில் இருந்து 150 வாக்கு பெட்டிகளை எடுத்து வருகிறார்கள்.  ஆட்டோவில் வாக்கு பெட்டியைக் கொண்டு வருகிறார்கள்.  சிறுவன் வாக்குபெட்டியை தூக்கிக் கொண்டு செல்வதையும்,  நட்சத்திர விடுதிகளில் வாக்கு இயந்திரங்கள் உள்ளதையும் வலைதளங்களில் உள்ள காணொளிகளில் காண்கிறோம்.

 

s

 

இது எந்த மாதிரியான அணுகுமுறை.  எல்லா இடங்களிலும் காசு கொடுக்கப்படுகிறது. ஆனால் எதையும் தடுக்க வில்லை தேர்தல் ஆணையம்.  வேலூரில் மட்டும் தான் பணம் கொடுக்கப்பட்டதா? அப்படித்தான் காட்ட முயற்சிக்கிறது. தேர்தலை நிறுத்தி உள்ளார்கள். இடைநிறுத்தம் செய்துள்ளார்கள் காரணம் காசு கொடுக்கிறார்கள் என்பதுதான்.   காசு கொடுத்த அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதை விடுத்து மொத்த ஆட்டத்தையும் நிறுத்தினால் எப்படி?  எங்களைப்போல கட்சிகள் பாதிக்கப்படுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர்.   நாங்கள் நேர்மையாக இருப்பதற்கு என்ன பயன் உள்ளது.

 

வசந்தகுமார்  பாராளுமன்றத்தில் வென்றுள்ளார்.  ஆனால் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.  தற்போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார்.  மறுபடியும் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தேர்தல் மக்கள் மீது திணிக்கப்படும் தேர்தல்.

 

ஒருவருக்கு இரண்டு பதவி.  இது எந்த மாதிரியான அரசியலமைப்பு.  இப்ப அவர் தொகுதியில் நடக்கும் தேர்தலில் அவர் சொந்த காசில் நடத்துவாரா? இல்லை இதற்கு தேர்தல் ஆணையம் பணம் கொடுக்குமா? இதுபோல் ஒவ்வொரு இடங்களிலும் தவறு இருக்கிறது’’என்று ஆவேசத்துடன் கூறினார்.

 

தேனி பாராளுமன்ற தொகுதியில் அனுமதி இல்லாமல் பல வாக்குப்பெட்டிகள் கொண்டு வந்ததாக கூறப்படுவது பற்றிய கேள்விக்கு.....

’’வாக்கு இயந்திரங்கள் கொண்டு வருவது நாடெங்கும் நடந்துள்ளது.  அதேபோல் தேனியில் நடந்திருக்க வாய்ப்பு அதிகம்.  தேனியில் வாக்கு இயந்திரம் கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று எங்களுக்கு கூறினார்கள்.  திடீரென்று மறு தேர்தல் வந்தால் என்ன செய்வது மறு தேர்தல் வரப் போகிறதா என்று நாங்கள் கேட்டோம். ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலும் கூறவில்லை.

வாக்குப் பெட்டி என்பது ஜப்பான் நிறுவனம் மைக்ரோசிப் மூலம் தயாரித்துக் கொடுப்பது.   தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஒருவர் எத்தனை வாக்குப்பெட்டிகள் ஜப்பானிடம் இருந்து வாங்கப்பட்டது என்று கேட்கிறார்.  20 லட்சம் பெட்டிகள் அனுப்பப்பட்டது என ஜப்பான் கூறுகிறது. அந்த 20 லட்சம் பெட்டிகள் வந்து சேர்ந்து இருக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் கேட்டால்,  இல்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

 

வாக்கு முடிந்து 42 நாட்கள் பெட்டியை ஒரே இடத்தில் வைத்து உள்ளீர்கள்.   ஒரு சில ஊர்களில் அதிகாரியே அனைவரின் ஓட்டுகளை செலுத்தி வருகிறார்.

முறையாக தேர்தல் நடந்தால் தான் வெற்றி எனக் கூறமுடியும்.  வாக்குகளுக்கு நாங்கள் காசு கொடுக்கவில்லை என ஒரு தலைவர் கூற முடியுமா?  நாங்கள் கூட்டம் கூட்டும் போது மக்களுக்கு காசு கொடுக்காமல் கூட்டினோம் என்று கூற சொல்ல முடியுமா?

 

ஆடு மாடுகளை ஓட்டி செல்வது போல் கூட்டங்களை ஏற்றி சென்று நிறுத்தி மக்களை 200, 300 ரூபாய்க்கு கையேந்த வைத்து எப்படி ஒரு தேர்தல் நடத்தினால் நாடு எதை நோக்கி செல்கிறது.   யோசித்துப் பார்த்தால் நாம் வளர்ச்சி என மோடி பேசி வருகிறார் 3 ஆயிரம் கோடியில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை இருக்கிறது.  அதே குஜராத்தில் மாடியில் தீப்பிடித்து எரியும் போது 28 பேர்களுக்கு மேல் இறந்து போனார்கள்.  ஏணியை வைத்து தண்ணியை பீச்சி அடிக்க முடியவில்லை.

ஒரு பேரிடர் காலங்களில் மக்களை எப்படி காப்பாற்றுவது என்ற அடிப்படை கட்டமைப்பு இல்லாத நாடு.   3000 ஆயிரம் கோடி செலவு செய்து சிலை அமைத்த உங்களுக்கு, மூன்று ஆயிரம் ரூபாய்க்கு ஏணி வாங்க முடியவில்லையா? ’’என்று கேள்வி எழுப்பினார்.


 திமுக அதிக பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதனால் தமிழகத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லை என்று கூறுவது பற்றிய கேள்விக்கு....

’’இது வந்து ஒரு கொடுமையான சர்வாதிகாரம்.  மக்களை அச்சுறுத்துவதற்காக கூறுவது.  மோடி  ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்கும்போது என்ன கூறினார் என்றால் ஆந்திராவின் வளர்ச்சிக்கு உதவுகிறேன் என்று கூறினார்.

மோடி தனது சொந்த பணத்தையும் சொத்தையும் விட்டு ஆந்திராவுக்கு உதவப் போகிறார்.  ஆந்திர மக்கள் வரி பணத்தை நீங்கள் எத்தனை விழுக்காடு வாங்குகிறார்கள்.  எத்தனை விழுக்காடு திரும்ப செலுத்துகிறீர்கள்.  தமிழகத்தில் நான் ஒரு ரூபாய் கொடுத்தால் 40 பைசா மட்டுமே திரும்ப வருகிறது.

 

உத்திரபிரதேசம் ஒரு ரூபாய் கொடுத்தால் 3 ரூபாய் 50 பைசா குடுக்கிறார்கள்.  எவ்வளவு பெரிய பாரபட்சம் இந்தியாவிலேயே அதிக வருமானம் தரக்கூடிய மாநிலத்தில் நான் இரண்டாவது மாநிலத்தில் இருக்கிறேன் . ஆனால் எனக்கு எவ்வளவு திருப்பிக் கொடுக்கிறீர்கள்.  ஒரு பேரிடர் காலத்தில் ஓகி புயல், குரங்கணி தீவிபத்து ....ஒரு நிவாரணம் கொடுத்தது கிடையாது.

பீகாரில்,  ஒரிசாவில் வெள்ளம் வந்தால் பறந்து சென்று பார்ப்பவர் எங்களை ஏன் பார்க்கவில்லை. இது மக்களை அச்சுறுத்துவது மத்தியில் இருக்கும் அரசை நயந்து போங்கள் என்று கூறுவது. அதை ஏற்க முடியாது.   ஒரு ஆண்டிற்கு 24 லட்சம் டன் கரியை (மாமிசம்) ஏற்றுமதி செய்கிறது இந்தியா அந்நிய செலவாணி இதன்மூலம் ஈட்டுகிறது

 

மாட்டுக்கறியை வெட்டி ஊருக்கு ஊட்டி விடுகிறார்கள்.  ஆனால் இங்கு இருப்பவர்கள் சாப்பிட்டால் அடித்துக் கொள்கிறீர்கள்.   முதலில் நீங்கள் எங்கள் உணவை உறுதி செய்யுங்கள்.  மூன்று வேளை உணவை உறுதி செய்து எதை சாப்பிட வேண்டும் எனக் கூறுங்கள்.

நான் எந்த கறியையும் சாப்பிடுவேன்.  மாட்டுக் கறி,  பன்றிக் கறி,  பாம்புக்கறி,  எலிக்கறி தின்பேன்.  அது என்னுடைய விருப்பம். மாட்டுக்கறியை திங்க கூடாது என அடிக்கிற நீங்கள் தஞ்சையில் தண்ணீர் வராமல் இருக்கும் போது பல்லி, பூரான், எலிகளை சாப்பிடும் போது நீங்கள் எங்கு சென்றீர்கள்.

இது ஒரு கொடும் போக்கு சிறுபான்மை என்பதை சொல்வதை கைவிட வேண்டும். அனைவரும் இந்திய நாட்டின் குடிமகன்கள்  சிறுபான்மை என்ற எண்ணமே ஆக ஆபத்தானது. இந்தியாவில் அனைவரும் இந்தியர்’’என்றார்.

 

 நாம் தமிழர் வாக்குகளை மக்கள் நீதி மையம் பிடித்து விட்டதா என்ற கேள்விக்கு...

எங்களின் கருத்து நோக்கங்கள் அனைத்தும் பிடித்தவர்கள் எங்களுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள்.  அதில் கமலஹாசன் வந்து எங்கள் வாக்கை பிரித்து இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை.  அடிப்படையில் சிலர் தமிழர்கள் நாங்கள் நாட்டை ஆள வேண்டும் என்று சொல்லும் தத்துவத்தில் அச்சப்படுவார்கள்.  இவர்கள் வந்தால் அதுவாக இருக்கும் என எண்ணி கமலுக்கு வாக்கு போடலாம் என்று நினைக்கலாம்.

 

50 ஆண்டுகளாக நடித்த நடிகர் புதுசா வருகிறார் . அவருக்கு ஓட்டு போட்டு பார்க்கலாம் என நினைக்கலாம்.   இங்கு என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால் பாஜக வரக்கூடாது என்ற கருத்தை நாங்களே அதிகமாக எடுத்து வைத்தோம்.  அதை திமுக அறுவடை செய்து உள்ளது.  எப்படி என்றால் சீமானுக்கு ஓட்டு போட்டீர்கள் என்றால் பிஜேபி வந்துவிடும் என்று பெரும்பாலான மக்கள் கிறிஸ்துவ ,,இஸ்லாமிய தமிழ் மக்கள் சுத்தமாக ஓட்டு போடவில்லை.  இதுவே பெரிய பாதிப்பு அதை திமுக திட்டமிட்டு செய்தார்கள்.  வீடுவீடாக சென்று அடுத்த தேர்தலில் கூட நாம் தமிழர்களுக்கு ஓட்டு செலுத்துங்கள் இந்த தேர்தலில் போடாதீர்கள் அவ்வாறு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என கூறியது பல சமூக வலைதளங்களில் இருக்கிறது.

 

இதில் பாஜக வரக்கூடாது என நினைத்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் சகிக்க முடியாதவர்கள் நீங்கள் பார்த்தீர்களானால் பதவியேற்கும் முன்பே இரண்டு பேரை கட்டிவைத்து மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் என அடிக்கிறார்கள்.    அவர்கள் போட்டது பசுக்கள் தான் எனக்கூறுகிறார்கள். கறியை வைத்து கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

 

6 வயது 8 வயது குழந்தையைக் கற்பழித்த கொலை செய்கிறார்கள். அதை கவனிக்காமல் பசுவை பாதுகாக்கவோ நின்று பேசுவது உலக பைத்தியக்காரத்தனமாக உள்ளது என சீமான் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய சின்னத்துடன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நாம் தமிழர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Naam Tamilar Party to introduce candidates and new  Symbol

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். வழக்கம்போல இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'கடலில் கலந்த எண்ணெய்யை மீனவர்களை விட்டு அள்ள வைப்பதா' - சீமான் கண்டனம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
'Don't keep the fishermen clean  the oil mixed in the sea'-seaman condemned

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் சுமார் 20 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு செய்ததில் அதிக அளவு ஃபீனால், கிரீஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு எண்ணூரின் கொசஸ்தலை ஆற்றின் கழிமுகப்பகுதியில் குறிப்பாக பக்கிங்காம் கால்வாயில் சிபிசிஎல் தொழிற்சாலைக்கு தெற்கு புறத்தில் உள்ள நீர் மாதிரிகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து பகுப்பாய்வு செய்தது. அந்த ஆய்விற்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அதிர்ச்சி தரும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. எண்ணூர் கழிமுகத்தில் கலந்த எண்ணெய் கலவையில் அதிக அளவில் ஃபீனால் மற்றும் கிரீஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கச்சா எண்ணெய்யாக அல்லது சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களாக இருக்கலாம் என தெரிய வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் மாதிரிகளை ஆய்வு செய்த பொழுது ஒரு லிட்டருக்கு 48 கிராம் அளவிற்கு ஃபீனால் இருப்பது தெரியவந்துள்ளது. 10 கிராமில் ஒரு கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும், ஒரு லிட்டரில் 728 மில்லி கிராம் அளவிற்கு பெட்ரோலிய பொருட்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

கடல் மற்றும் ஆற்றுப்பகுதியில் கலந்திருக்கும் எண்ணெய் கழிவுகள் பல இடங்களில் மீனவர்களை வைத்து அள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மீனவர்களை வைத்து ஆபத்தை ஏற்படுத்தும் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில், 'சிபிசிஎல் நிறுவனத்தின் தவறால் வெளியேறி கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை மீனவ மக்களை வைத்து அள்ளுவது கண்டனத்திற்குரியது. அவ்வாறு செய்யக்கூடாது. உரிய பாதுகாப்பு கருவிகளுடன், முறையான பயிற்சி பெற்றவர்களை பணியில் ஈடுபடுத்தி கடலில் கலந்த எண்ணெய் கழிவுகளை வெளியேற்ற வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.