Skip to main content

சீமான் பேச்சால் பொதுமக்கள் ஆவேசம்... அதகளம் பட்ட விழா மேடை! 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

Seeman controversial speech


திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா பிரம்மதேசம் கிராமத்தில் ராஜேந்திரசோழன் சமாதி உள்ளது. ராஜேந்திர சோழன் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேந்திரசோழன் பெருவிழா ஜுலை 21 ஆம் தேதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.


விழாவினையொட்டி கிராமத்தில் உள்ள தெருக்களில் நாம்தமிழர் கட்சியின் கொடிகளை கட்டவும் விழா மேடை அருகே கொடிகம்பம் அமைக்கவும் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் பொதுமக்களுக்கும் நாம் தமிழர் கட்சி இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 


இதுக்குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், “ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் வரலாறுதான் வழிகாட்டும். வரலாறு படித்தால்தான் வரலாறு படைக்க முடியும். வரலாறு என்பது வார்த்தையல்ல, வருங்கால தலைமுறையின் வழித்தடம். பாண்டியர்களுக்கும் சோழருக்கும் இடையே ஏற்பட்ட பகையின் காரணமாக வஞ்சகத்தால் ஆதித்ய கரிகாலன் என்னும் நம் பெரும் பாட்டன் வீழ்த்தப்பட்டார். 


சேர, சோழ, பாண்டியர்கள் சேர்ந்து அடித்து இருந்தால் உலகத்தில் ஒரு நாடும் வேற யார் கையிலும் இருந்திருக்காது. நம்மிடம்தான் இருந்திருக்கும். ஆனால், இது சொந்த ரத்தங்களுக்குள் நடந்த யுத்தம். அதுபோலத்தான், இங்க நம்மள, நம்ம கொடிய ஏற்ற விடமாட்டேங்குறாங்க. இந்த மண்ணின் மகன், மான தமிழ்மகன், ஒரு தமிழ்மகன் ஏற்றும் போது ஏன் வலிக்கிறது?. நான் பறையை தான் அடிச்சேன் உன்ன அடிக்கல. இந்த சேட்டையெல்லாம் வேற எங்காவது வைத்துக்கொள்ளுங்கள். நான் நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே வந்து இங்கிருந்திருந்தால், இங்கே கொடியேற்றாதே, பறை அடிக்காதே எனச் சொல்லி இங்கிருந்து யாரும் தப்பித்து சென்றிருக்க முடியுமா? தேர்தலில் தனித்து நிற்போம் வா. 24ல் நிற்போம்.. 26ல் நிற்போம். இது உங்கள் கோட்டை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் என் கோட்டை. பேரம் பேசி, பெட்டி வாங்கி, சீட்டு வாங்கி, ஓட்டு வாங்கி கட்சி நடத்துபவன் நாங்கள் இல்லை” என கோபத்துடன் மேடையில் சீமான் பேசிக்கொண்டிருந்தபோது அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சீமான் பேச்சு கேட்க, கேட்க ஆவேசமடைந்தனர். (குறிப்பாக சீமான் ஒருமையில் பேசினார். மேலும், மோசமான சொற்களையும் உபயோகப்படுத்தினார்)


அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். வரலாறு சம்பந்தமாக மட்டுமே பேச வேண்டும். இங்கு அரசியல் சார்ந்து எதுவும் பேசக்கூடாது. அதற்கு நீங்கள் அனுமதிக்கக்கூடாது என டி.எஸ்.பி செந்தில் மற்றும் போலீஸாரிடம் பலரும் வாக்குவாதம் செய்தனர். இதனைக் கண்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருதரப்பு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. பதட்டமான சூழ்நிலையில் இங்கும் அங்குமாக இருதரப்பினரும் கூடி வாக்குவாதம் செய்ததால் போலீசார் அவர்களை சமாதானம் செய்ய துவங்கினர்.  


நேரம் ஆக ஆக பதட்டம் கூடத்தொடங்கியது. சீமான் பேச்சை நிறுத்த வேண்டும் எனக் கிராமத்தினர் வாக்குவாதம் செய்து கூச்சலிட்டுக் கொண்டிருந்த போதிலும், மறுபுறம் சீமான் மேடையில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் விழா மேடையை நோக்கி முன்னேறினர். சீமான் தரப்பினரும் தாக்குதல் நடத்த தயாராகினர். போலீஸ் இருதரப்பையும் தடுத்து விலக்கியனுப்பியது. கிராம இளைஞர்கள் சிலர் விழாவிற்காக வரிசையாக அமைக்கப்பட்டிருந்த மின் அலங்கார லைட்களையும், கொடிகளையும்  உடைத்தனர். அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினரின் கார் கண்ணாடியையும், இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தினர். 


இதனால் அங்கு பதட்டம் அதிகரித்தது. இந்நிலையில் திடீரென பெய்த மழை இருதரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போகச்செய்தது. நேரம் செல்லச்செல்ல மழை அதிகரித்ததால் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சீமான் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். அவரை மாவட்ட எல்லை பகுதி வரை செய்யாறு டி.எஸ்.பி செந்தில்  தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.


சீமான் பேச்சால் ஏற்பட்ட உஷ்ணத்தால் ஏற்படவிருந்த பெரும் மோதலை மழை தடுத்து நிறுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்