Skip to main content

’சாதி என்பது பெருமை அல்ல; சக மனிதனை தாழ்வாக நினைக்கின்ற ஒரு உளவியல் நோய்’-சீமான்

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று, 26-08-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:    ‘’வேதாரண்யத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் சிலையைப் பட்டப்பகலில் சமூக விரோதிகள் உடைத்து நொறுக்கிய செய்தி பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையையும் அளிக்கிறது. சாதிய வன்மத்தோடு நிகழ்ந்த எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் நடைபெற்ற இச்சம்பவம் வன்மையானக் கண்டனத்திற்குரியது. காவல் நிலையத்தின் மிக அருகே பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சமூகவிரோத குற்றச்செயல் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யிருக்கிறது.

 

s

 

உடைத்துத் தகர்க்கப்பட்ட அதே இடத்தில் அண்ணலின் சிலையை உடனடியாகத் தமிழக அரசு நிறுவியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், இதுவே போதுமான நடவடிக்கையாக கருத முடியாது. காவல்நிலையம் அருகாமையிலேயே நடைபெற்ற இச்சம்பவத்தின்போது சிலையைத் தகர்க்க சமூக விரோதிகள் முற்பட்டபோதே காவல்துறை அதிகாரிகள் விரைந்து தடுத்து அவர்களைக் கைது செய்திருக்க வேண்டும். அதனை ஏன் செய்யாமல் சிலை தகர்க்கும் வரை விட்டார்கள் என்கிற கேள்வி எழுகிற வகையில் காவல்துறையினரின் நடவடிக்கை அமைந்துவிட்டது. இதன்மூலம், காவல்துறை அதிகாரிகள் வன்முறையாளர்களின் இச்செயலுக்கு மறைமுகமாகத் துணைபோயிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. ஆகவே, அண்ணலின் சிலை தகர்ப்பு குற்றச் செயல் நடக்கும் போது தங்கள் கடமையை செய்யாமல் அலட்சியம் செய்த காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 

அண்ணல் அம்பேத்கரின் தியாக வரலாற்றையும், மாபெரும் பணிகளையும் பொதுச் சமூகத்திற்கும், இளம் தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தினை இதுபோன்ற குற்றச்செயல்கள் உணர்த்துகின்றன. அவரைக் குறிப்பிட்ட மக்களுக்கான, குறிப்பிட்ட சமூகத்துக்கானத் தலைவராக மட்டும் பார்ப்பது எதன்பொருட்டும் சகித்துக் கொள்ள முடியாத வரலாற்று அறிவீனம். அவர் ஒட்டுமொத்த இந்திய நிலத்து மக்களுக்காக சிந்தித்த, உழைத்த மாபெரும் தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் அவர் எவ்வாறு கடுமையாகப் போராடினாரோ, அதற்குச் சற்றும் குறைவில்லாது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், அவர்களது உரிமைகளுக்காகவும் போராடியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவர் இந்திய நிலத்தின் பொதுமைக்குமான மக்கள் தலைவர். இந்த புரிதலற்ற தன்மையே நடைபெறுகின்ற இதுபோன்ற வன்முறை செயல்களுக்கு முதன்மை காரணமாக அமைகிறது.

 

நாற்புறமும் சிக்கல்கள் சூழ்ந்து தமிழகமே வளவேட்டைக்கு இரையாகி அழிவின் விளிம்பில் நிற்கிற இவ்வேளையில் நடைபெறுகின்ற இச்செயல் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது. அதே வேதாரண்யத்தைச் சுற்றிலும் மீத்தேனும், ஹைட்ரோ கார்பனும் எடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கானப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிற நிலையில் மண்ணைக் கபளீகரம் செய்யும் அம்முயற்சிகளைத் தகர்க்காது, மண்ணிற்காகப் போராடிய அம்பேத்கரின் சிலையை அற்ப சாதிய வன்மத்திற்காக தகர்ப்பது என்பது நாகரீகமடைந்த சமூகத்தில்தான் நாமெல்லாம் வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்புகிறது.

 

அணு உலை, அணுக்கழிவு மையம், நியூட்ரினோ மையம், எட்டுவழிச்சாலை, கெயில் குழாய் பதிப்பு, உயர்மின்னழுத்தக் கோபுரங்களைப் பதித்தல் எனத் தமிழகத்தின் மீது ஒரு நிலவியல் போர் தொடுக்கப்பட்டு இருக்கிற சூழலில் அத்தகையப் பேரழிவுத் திட்டங்களை விரட்டவும், அகற்றவும் எவ்விதப் போராட்டங்களையும் முன்னெடுக்காதவர்கள் சிலையைத் தகர்ப்பதன் மூலம் அப்பகுதியில் சாதியப் பதற்றத்தை உருவாக்கி வன்முறை வெறியாட்டங்களை நிகழ்த்த வாய்ப்பு தேடிவருகிறார்கள்.

 

தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் யாவற்றையும் வடமாநிலத்தவர்கள் அபகரித்துத் தமிழர்களின் பொருளியல் வாழ்வைக் கேள்விக்குறியாக்கி வறுமையிலும், ஏழ்மையிலும் நம்மை நிறுத்தியிருக்கிற இவ்வேளையில் தமிழ்த்தேசிய இனமே அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட இனம் என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்தால்தான் சாதியப் பெருமிதம் சாகடிக்கப்படவேண்டிய ஒரு விபரீத மனநோய் என்பதை அறிய முடியும். ஆகவே, இன அழிப்பையும், உரிமைப் பறிப்பையும் கண்முன்னே கண்டும் ஏதும் செய்ய இயலாத கையறு நிலையில் நிற்கிற நாதியற்ற இவ்வினத்திற்குச் சாதிதான் ஒரு கேடா என்கிற கேள்வியை ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளையும் நம் மனதில் எழுப்ப வேண்டும். சாதி என்பது பெருமை அல்ல; சக மனிதனை தாழ்வாக நினைக்கின்ற ஒரு உளவியல் நோய் என்பதைப் புரிந்து கொண்டு சாதிய உணர்வுகளை எமது இளம் தலைமுறையினர் சாகடித்துத் தமிழராக நிமிர முன் வரவேண்டும்.

 

ஆகவே, அண்ணல் அம்பேத்கரின் சிலையைத் தகர்த்து சாதிவெறியாட்டம் போட்ட சமூக விரோதிகளை எவ்விதப் பாரபட்சமுமின்றி உடனடியாகக் கைதுசெய்து, குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வேதாரண்யம் பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாவண்ணம் இருக்க தக்கப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். தமிழக அரசு இனிமேலாவது இதுபோன்றக் குற்றச்செயல்கள் நிகழாவண்ணம் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.