ADVERTISEMENT

தொண்டனின் மனைவி மரணம் - மன்னிப்பு கேட்ட சீமான்

11:55 PM Aug 03, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பாரதிராஜாவின் 'என் உயிர்தோழன்' படத்தில் வரும் கதாநாயகன் கேரக்டர் மாதிரி, தன் தலைவனையே சுற்றி சுற்றி வருபவர் தமிழ்மணி. திருமணம் ஆகி சீமானிடம் ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார். வீட்டில் எந்த நேரமும் சீமான் புராணம்தான். 2016 சட்டமன்ற தேர்தலில் திருமங்கலத்தில் நாம் தமிழர் வேட்பாளராக நின்றவர் தமிழ்மணி.

ADVERTISEMENT

நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர், மதுரைக்கு அருகில் உள்ள வத்திராய்ப்பில் நகைகடை நடத்தி வந்தவர், சீமானின் தீவிர பற்றாளர் என்றே சொல்லலாம். தன் கையில் சீமான் பெயரை பச்சை குத்தியிருக்கிறார். எப்போது பார்த்தாலும் கையில் கட்சி நோட்டீஸ் வைத்துக்கொண்டு, வருவோர் போவோரிடம் கொடுத்து கொண்டே இருப்பவர். தன் கடையில் வரும் வாடிக்கையாளர்களிடமும் கட்சி கொள்கை நோட்டீஸ் கொடுப்பது வழக்கம். அந்தளவுக்கு கட்சி மீது பற்று உள்ளவர் ... என்றார் செந்தில்.

அருகில் இருந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் {பெயர் வேண்டாம்} தமிழ் சீமான் வெறியன் சார். அண்ணே தான் அவர் குழந்தைக்கு இன்பதமிழன், தமிழ்நிலா என்று பெயர் வைத்தார்.


மனைவி வீட்டாரின் பெரும் முயற்சியால் திருமங்கலம் அருகில் உள்ள வத்திராய்ப்பில் நகை கடை வைத்து சிறப்பாக நடத்தி வந்த நிலையில் வினையாக வந்தார் துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி பொறுப்பாளர். இவர் தமிழ்மணியின் நகைக்கடையில் நகை எடுக்கிறார். அதில் ரூ.65 ஆயிரம் துண்டு விழ, ஒரு வாரத்தில் தந்துவிடுகிறேன் என்று நகையை கொண்டு செல்கிறார். சரி, கட்சிகாரர்தானே என்று விட்டுவிட ஒரு வாரம் ஒரு வருடமாகிறது.

கட்சி கட்சி என்று இவர் இருந்தபடியால் கடையை சரிவர நடத்தாமல், தன் சொந்த செலவில் மீட்டிங், தெருகூட்டம் என்று இருந்ததால் தொழிலில் நஷ்டம் ஏற்பட கடன் தொகை 65 ஆயிரத்தை கேட்கிறார். துரைமுருகனோ ”இங்க பாரு தமிழ்’ நான் இப்ப அண்ணனுக்கு ரொம்ப நெருக்கமாகிட்டேன். கட்சியின் அனைத்து செய்திகளும் என் மூலமாக தான் போகிறது. தனியா யூடியூப் சேனல் வச்சிருக்கேன். உனக்கு மாநில அளவில் பதவி வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை காட்ட தமிழ்மணியோ அண்ணே எனக்கு பதவி எல்லாம் வேண்டாம். இப்படியே இருந்துட்டு போகிறேன். இப்ப எனக்கு ரொம்ப பணகஷ்டம் இருக்கு. தயவு செய்து பணத்தை திருப்பி கொடுங்க. நீங்க நம்ம கட்சிகாரராக இருந்துட்டு இப்படி செய்யலாமா இப்படியே போனா நான் அண்ணனிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்ல,

துரைமுருகன்

இப்படியே நாட்கள் நகர திடீரென துரைமுருகனிடம் இருந்து போன், கெட்ட கெட்ட வார்த்தைகளில் சகட்டுமேனிக்கு இதை தாங்கி கொள்ளமுடியாமல் வீட்டிற்கு வந்த தமிழ்மணி தன் மனைவியிடம் சொல்கிறார். மனைவி அவருக்கு ஆறுதல் கூறி, ”சீமான் அண்ணனிடம் நடந்தவற்றை எடுத்து சொல்லுங்க. அவர் கட்டாயம் ஒரு தீர்வு சொல்லுவார். அப்பதான் துரைமுருகனும் பயந்து பணத்தை திருப்பி கொடுப்பார் என்று சொல்லியிருக்கிறார்.

சரி என்று தமிழும் தன் தலைவருக்கு போனை போட்டிருக்கிறார். எதிர் முனையில் பேசிய தலைவர் சீமானோ, இவர் விசயத்தை சொல்லுவதற்கு முன்பே, எல்லாம் துரை சொல்லிட்டான்பா அவரை பிளாக்மெயில் பண்றியாமே. அண்ணனுக்கு நான் நெருக்கம். அடிக்கடி போனில் பேசுகிறேன், உன்னை மாநில பொறுப்பில் இருந்து எடுத்திடுவேன் என்று மிரட்டுகிறாயாமே என்று சொல்லிகொண்டே இவரை பேசவிடாமல் ஒருமையில் திட்ட ஆரம்பிக்கிறார். என்னண்ணே இப்படி சரியாக விசாரிக்காமல் கண்டமேனிக்கு திட்டுகிறீர்கள். என் மனைவி அருகில் இருக்காங்க. நாங்க இரண்டுபேருமே உங்க மேல அளவுகடந்து பாசம் வச்சிருக்கோம் என்று சொல்ல, அதை காதில் வாங்காமல், உன்னை கட்சியிலிருந்து இந்த நிமிடமே நீக்குகிறேன் வெளியே போடா நாயே.. என்று கோவமாக திட்டி போனை வைத்துவிட்டார்.

வேகமாக வீட்டிலிருந்து வெளியேறிய தமிழ்மணி குடித்துவிட்டு வந்து வீட்டின் மாடியில் தூக்கு போட முயற்சிக்க அதை தடுத்து நிறுத்திய மனைவி ஓ...........வென்று கதறி அழ, இந்த மனுசன் கிறுக்கா திரிஞ்சாரே.. கட்சி, கட்சி பணம், காசு எல்லாத்தையும் விட்டு இப்ப யாருக்காக உயிரையே வச்சிருந்தாரோ அவரே போடா நாயே என்கிறாரே என்று அழுததை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்த நாள் மீண்டும் துரைமுருகன் ஆட்கள் போன் செய்து தொந்தரவு கொடுக்க, கணவர் தமிழ்மணி வேலைக்கு போன சிறிது நேரத்தில், மனைவி ஜான்சி தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள, தகவல் தெரிந்து ரோட்டில் உருண்டு கதறி அழ, அடுத்தநாள் மதுரை அரசு மருத்துவமனையில் போஸ்மார்டம் முடிந்து அவரின் சொந்த ஊரான பேரையூருக்கு உடல் கொண்டுவரபட்டது. அங்கு சீமான் நேரில் வந்திருந்து ஆறுதல் கூறினார்.


அண்ணே என் தெய்வம் போயிட்டா அண்ணே என்று கதறி அழுதபோது, அருகில் இருந்தவர்கள், இந்த ஆறுதலை அப்போதே சொல்லியிருந்தா தமிழ்மணி மனைவி இப்படி கணவரை குழந்தைகளை விட்டுவிட்டு போயிருக்காது என்று சொல்ல ஒரு நிமிடம் சீமான் கண்ணில் கண்ணீர் வந்தது.


பாரதிராஜாவின் ’என் உயிர் தோழன்’ படத்தில் வரும் பாபு கேரக்டர் மாதிரி சார் எங்கள் தமிழ்மணி. இப்ப அந்த இரண்டு குழந்தைக்கு யார் பதில் சொல்வது என்று அருகில் இருந்தவர்கள் சொன்னதும், ’’தமிழ் மன்னிச்சிடுடா என்று அழுதார் சீமான்.

அப்ப கூட தமிழ், ‘’நீங்க சிங்கம்ண்ணே ...என் தலையெழுத்து ...’’என்று ஓவென்று கதறி அழுதது எல்லோர் நெஞ்சையும் உலுக்கியது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT