Skip to main content

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியாகும் மொழிப் பட்டியலில்  தமிழை உடனடியாகச் சேர்த்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 02-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:    ’’இந்தியப்பெருநிலத்தின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னக மாநில மொழிகள் அடங்கியிருக்கிற இந்தப் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடம் இல்லை என்கின்ற நிலை எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

s

 

சட்டம், தீர்ப்பு தொடர்பான கலைச்சொற்கள் ஏற்கனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்தியச் சட்டங்கள் தமிழ்மொழியில் பல்வேறு நூல்களாக ஏற்கனவே மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. நீதிமன்ற, நிர்வாக மொழியாக இருக்கும் தகுதியை தமிழ் மொழி ஏற்கனவே அடைந்து விட்ட சூழலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழ் மொழியில் வெளியிட எவ்விதமான தடையும் இல்லை. இந்நிலையில் கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னக மொழிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற உரிய அங்கீகாரம் தமிழ் மொழிக்கு வழங்கப்படாதது இந்திய நீதித்துறையின் பாரபட்சமான நடவடிக்கை. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழி தனது இலக்கண இலக்கியச் செழுமைகளால் இந்திய பெருநிலத்தின் நீண்ட காலம் நிலைத்து தழைத்து ஓங்குகிற மூத்த மொழியாகத் திகழ்ந்து வருகிறது.

 

‘தமிழ் தான் இந்திய நிலத்தின் மூத்த மொழி’ என்பதைப் பல்வேறு புகழ்பெற்ற அறிஞர்களும், பல சான்றோர் பெருமக்களின் ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன. தமிழ் மொழி பேசி வந்த நாகர்களே இந்தியப்பெருநிலத்தில் மூத்த குடிமக்கள் என இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூட இந்தியாவின் பாரம்பரியமிக்கப் பண்பாட்டின் மூத்த மொழி தமிழ்மொழி எனப் புகழாரம் சூட்டியிருக்கிறார். உலகின் மிக மிகத் தொன்மையான மொழியான தமிழ் மொழி ஓர் உயர்தனிச் சொம்மொழியாகும். எல்லா இலக்கண இலக்கிய வளங்களையும் தன்னகத்தே கொண்டு, எம்மொழியின் துணையுமின்றித் தனித்து இயங்கவல்ல பேராற்றல் கொண்ட தன்னிகரில்லா மொழியான தமிழை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியிடும் மொழிகளின் பட்டியலில் சேர்க்காதிருப்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.

 

தமிழகம் ஏற்காத இந்தியை வலுக்கட்டாயமாகத் திணிக்கிற முன்முயற்சிகள் வீரியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கும் மொழிகளின் பட்டியலில் சேர்க்காதிருப்பது தமிழருக்கும் தமிழ் நாட்டிற்கும் எதிராக வட மாநிலங்களைச் சேர்ந்தோர் கொண்டிருக்கின்ற உளவியலைத் தெளிவாகக் காட்டுகிறது.

 

தமிழை உயிரெனக் கொண்டு வாழும் தமிழ் மக்களுக்கு இத்தகைய அறிவிப்பானது பெருத்த ஏமாற்றத்தையும், மனவேதனையையும் தருகிறது. இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டங்களில் அதிகப் பங்களிப்பினைச் செய்து இந்நாட்டிற்கு வரி செலுத்தி வாக்கு செலுத்தி இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் தமிழ் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக வன்மம் காட்டி வரும் இந்திய வல்லாதிக்கத்தின் இன்னுமொரு அறிவிப்பாகத் தான் இந்த அறிவிப்பினைக் காண முடிகிறது.

 

இந்தியாவின் அரசிலமைப்புச்சாசனத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளுள் சிறப்பிடம் வகிக்கும் தமிழ் மொழியினை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படும் பட்டியலில் சேர்க்க வேண்டியது இந்நாட்டின் தார்மீகக் கடமையாகும். ஆகவே, தமிழ் மொழிக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்படும் பட்டியலில் தமிழையும் இணைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசரைக் கேட்டுக்கொள்கிறேன்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்