தமிழ்நாட்டில் 1995- ஆம் ஆண்டில் ஏழு லட்சம் பரப்பளவு ஹெக்டேர் சாகுபடியாக இருந்த நிலக்கடலை சாகுபடி தற்போது 3 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இக்குறைவுக்கு முக்கிய காரணமாக இருப்பது தரமற்ற விதைகள். விவசாயிகளுக்கு தரமான விதைகள் சரியான நேரத்தில் கிடைக்காமல் போவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பருவமழை பெய்தவுடன் விவசாயிகள் அருகிலுள்ள வியாபாரிகளிடமிருந்தும், தனியார் கடைகளிலிருந்தும் தரமற்ற விதைகளைப் பெற்று சாகுபடி செய்வதால் மகசூல் குறைவதுடன், பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியவில்லை. இந்த குறைபாட்டினை போக்கும் வகையில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் இயங்கக்கூடிய மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நிலக்கடையில் அதிக விளைச்சல் தரக்கூடிய, சான்று விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நடைமுறை எடுக்கப்பட்டது.
இந்த நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உயர் விளைச்சல் ரகமான வி.ஆர்.ஐ-08 என்ற கொத்து ரகத்தில், 50 டன்கள் தரமான சான்று விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக தயார் நிலையில் உள்ளது என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்வதற்கு சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்த நிலையில், தற்போது வைகாசி பட்டத்திற்கு ஏற்ற நிலக்கடலை விதைகளை வாங்கி பயன்பெற வேண்டும் என்று விவசாயிகளுக்கு மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ நிலக்கடலை விதை 90 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், தேவைப்படுவோர் மண்டல ஆராய்ச்சி நிலையத்திற்கு தொடர்புகொண்டு வாங்கிச் செல்ல வேண்டும். விவசாயிகள் 94430- 46221 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விதைகளை வாங்கிச் செல்லலாம். இவ்வாறு மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் மோதிலால் கூறியுள்ளார்.
சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கான அறிவிப்பைத் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசின் வேளாண் உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏழு லட்சம் ஏக்கர் சம்பா மகசூல் இழப்புக்கு 560 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 மெட்ரிக் டன் உற்பத்தி அடையப்பட்ட போதிலும், வடகிழக்கு பருவமழை குறைவாகப் பெய்த காரணத்தால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் 33 சதவீதத்திற்கும் மேற்பட்ட வேளாண் பயிர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து 181 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கி உள்ளது. இந்த நிலையில் தற்போது 560 கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. 6 லட்சம் தகுதியுடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என்று வரவு வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தியாகராஜன் மகன் இளையராஜா(45). தி.மு.க பிரமுகரான இவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற முன்னாள் மாவட்ட பொறுப்பாளராவார். மேலும் வள்ளலார் குடில் என்ற ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் இல்லத்தை நடத்தி வருவதுடன் இயற்கை விவசாயம் செய்து, அது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை, இளையராஜா நாளை(10 ஆம் தேதி) நடைபெற உள்ள இயற்கை விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக கொளஞ்சியப்பர் கோவில் அருகே உள்ள தனது சொந்த நிலத்தில் வேளாண் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அது முடிந்து அதிகாரிகள் கிளம்பிச் சென்ற பிறகு மாலை 5.30 மணியளவில் தானும் கிளம்புவதற்காக காருக்கு அருகே வந்துள்ளார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களைப் பார்த்ததும் இளையராஜா வேக வேகமாக காருக்குச் சென்று ஏற முயன்றார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் இளையராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட, அந்த குண்டு இளையராஜாவின் பின்பக்கமாக இடுப்பு பகுதியில் பாய்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட இளையராஜா, அங்கிருந்து தப்பிப்பதற்காக காரில் ஏறி, கதவைப் பூட்டிக்கொண்டு காரை இயக்க முற்பட்டபோது, அந்த கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் கைத்துப்பாக்கியால் காரின் முன்பக்க கண்ணாடி வழியாகச் சுடவே, அந்த குண்டு கார் கண்ணாடியைத் துளைத்தது. கண்ணாடிகள் உடைந்து அவரது கழுத்தில், மார்பில் படவே இரத்தம் பீரிட்டு வெளியேறியது. மேலும் அந்த கும்பல் இரண்டு முறை காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றது. இளையராஜாவும் வேக வேகமாக காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் விருத்தாசலம் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் இளையராஜா, “இயற்கை வேளாண்மை நிகழ்ச்சிக்காக வேளாண் அதிகாரிகளிடம் பேசிவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு நானும் வீட்டிற்கு புறப்பட தயாரானேன். அப்போது ஆடலரசன், புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் மூன்று பைக்கில் வந்தனர். ஆடலரசன் தனது இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். இதை பார்த்து நான் அருகில் இருந்த எனது காரில் ஏறி தப்பிக்க முயன்றேன். அதற்குள் புகழேந்தி துப்பாக்கியால் சுட்டார். ஆடலரசின் கையிலும் துப்பாக்கி இருந்தது. நான் காருக்குள்ளே சென்று கார் கதவை மூடியதும் என்னை நோக்கி ஓடி வந்த ஒருவர் கார் கண்ணாடி வழியாக மீண்டும் என் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால் எனக்கு கழுத்து, தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதே கும்பல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கத்தி அரிவாளுடன் பொன்னேரி - சித்தலூர் பைபாஸில் வழிமறித்து தாக்கிக் கொலை செய்வதற்கு முயற்சித்தனர். இது குறித்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இளையராஜா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்தும், அவர்களுக்குத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரின் மகனும் ஓ.பி.எஸ் அணியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளருமான புகழேந்தி, அவரது தம்பி ஆடலரசு மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது கொலை முயற்சி, உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடினர். மேலும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதனிடையே இன்று அதிகாலை கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது மகன்கள் புகழேந்தி, ஆடலரசு ஆகியோர் வந்தபோது போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணைக்காக விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்
விசாரணையில் புகழேந்தி மற்றும் ஆடலரசு ஆகியோருக்கும், இளையராஜாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக இளையராஜாவை கொலை செய்யும் நோக்கத்தில் 2 கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்த புகழேந்தி, ஆடலரசன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் பாளையங்கோட்டை விஜயகுமார், விருத்தாசலம் சரவணன், மதுரை சூர்யா, விருத்தாசலம் வெங்கடேசன் ஆகிய 6 பேரையும் விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 2 கள்ள கைத்துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.