Owner arrested

சென்னையில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் குளியல் அறைகள், படுக்கை அறைகள் என 16 இடங்களில் ரகசிய கேமரா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கு தங்கியிருந்த பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் விடுதியின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கத்தில் இருக்கக்கூடிய தில்லைநகர் 4வது தெருவில் தனியாக ஒரு வீட்டில் முழு தளத்தையும் வாடகைக்கு எடுத்து அதில் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியை கடந்த ஒரு ஆண்டாக திருச்சியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவர் நடத்தி வந்தார். தன்னுடைய தங்கும் விடுதியில் அனைத்து வசதிகளும் உள்ளதாக கூறி இணையதளங்களிலும் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரங்களை பார்த்து பணிகளுக்கு செல்லும் பெண்கள் அங்கு தங்கியுள்ளனர்.

Advertisment

கடந்த சில மாதமாக பராமரிப்பு பணி இருப்பதாக கூறி அடிக்கடி சஞ்சீவ் விடுதிக்குள் செல்வார். மேலும் குளியல் அறைகள், படுக்கை அறைகள் வரை செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

படுக்கை அறைகள், குளியல் அறைகள் வரை அவர் செல்வதை அங்கு தங்கியுள்ள பெண்கள் சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர் இதுபோல் வருவதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா என்பதை கண்டறிய முற்பட்டனர். அதேபோல் அவர்கள் குளியல் அறைகள், படுக்கை அறைகளை ஆய்வு செய்ததில் 16 கேமராக்கள் இருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment

இதனை விடுதியின் உரிமையாளர் சஞ்சீவ்தான் பொறுத்தியிருக்கிறார் என்பதை உறுதி செய்த அந்த பெண்கள், ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்ற போலீசார் சஞ்சீவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் வேறு எங்காவது இவர் தங்கும் விடுதி நடத்தி வருகிறாரா? இவருக்கு துணை போனது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கைது விவகாரம் சென்னையில் மற்ற விடுதிகளில் தங்கும் பெண்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.