Skip to main content

இரண்டே வாரத்தில் எஸ்.பி. இடமாற்றம்- இராணிப்பேட்டையில் பரபரப்பு!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

In the second week S.P. Relocation- Excitement at Ranipettai!

 

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து 2019- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இராணிப்பேட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனம் நியமிக்கப்பட்டார். சரியாக ஓராண்டுக் காலம் பணியாற்றினார். 2021- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மயில்வாகனம் மாற்றப்பட்டு சிவக்குமார் நியமிக்கப்பட்டார்.

 

தேர்தல் முடிவுகள் வந்தது, புதியதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகளை இடமாற்றம் செய்தனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்தபோது இராணிப்பேட்டை எஸ்.பி.யாக இருந்த சிவக்குமார் மாற்றப்பட்டு புதிய எஸ்.பி.யாக மீனா நியமிக்கப்பட்டார். அவரும் சில வாரங்களில் மாற்றப்பட்டு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்ஜய் நியமிக்கப்பட்டார்.

 

இவர் நியமிக்கப்பட்டு முழுவதாக இரண்டு வாரங்கள் கூட முடியவில்லை. அதாவது ஆகஸ்ட் 2- ஆம் தேதி தான் பதவியேற்றார். தற்போது இவர் மாற்றப்பட்டது ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ஆகஸ்ட் 16- ஆம் தேதி ஏழு காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஒருவர். தேஷ்முக் சேகர் சஞ்ஜய், காவல்துறை சிறப்பு அதிரடிப்படையின் 6- வது பட்டாலியன் (மதுரை) க்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ராணிப்பேட்டை எஸ்.பி.யாக தீபாசத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரயில்வே துறையின் கண்காணிப்பாளராகச் சென்னையில் பணியாற்றி வந்தவர்.

 

பொதுவாக உயர் அதிகாரிகள் இடமாற்றம் என்பது இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அரசு விதிப்படி ஒரு அரசு அதிகாரி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியாற்றக் கூடாது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அமைச்சரவை மாற்றம், உயர் அதிகாரிகள் மாற்றம் என்பது அடிக்கடி நடக்கும், எப்போது நடக்கும், எதனால் நடக்கிறது என யூகிக்கவே முடியாது.

 

அதேபோல் இப்போதும் நடக்கிறதா என்கிற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. ஒருமாவட்டத்தின் எஸ்.பி.யாக பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் கூட முடியாத நிலையில் அவரை மாற்றியது ஏன், ஆட்சியாளர்களுடன் மோதலா? அதிகாரிகளுடன் மோதலா? அல்லது விரும்பிய வேறு பதவி வாங்கிச்செல்கிறாறா என்கிற பட்டிமன்றம் மக்களிடம் நடக்கிறது.

 

அவர் மாற்றலுக்கான உண்மையான காரணம், "தஞ்சாவூரில் எஸ்.பி.யாக இருந்தபோது, ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்பட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் மீது பலரும் தந்த மோசடி புகாரை விசாரிக்காமல் இருக்க பல லட்ச ரூபாய் பணம் வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் அங்கிருந்து இராணிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது செய்யப்பட்டபோது தந்த வாக்குமூலத்தில் இரண்டு முறை லஞ்சம் தந்ததாக அவர்கள் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே உயரதிகாரிகள் அவரை இடமாற்றம் செய்யப் பரிந்துரை செய்து தற்போது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டுள்ளார்" என்கிறார்கள் விவரம் அறிந்தோர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.