திராவிட அரசியலில் தனது பங்களிப்பை உலகறிய செய்ய, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய 'உங்களில் ஒருவன் ' நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரமாண்டமாக நடக்கிறது. இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி இந்த நூலை வெளியிடுகிறார். துரைமுருகன் தலைமையிலும், டி.ஆர்.பாலுவின் முன்னிலையிலும் நடக்கும் இந்த விழாவில், ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, பீகாரின் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்தியராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவில் கலந்துகொள்ளும் தலைவர்கள், சான்றோர்கள், திமுக தலைவர்கள் அனைவரையும் வரவேற்கிறார் கனிமொழி எம்.பி.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் நூல் வெளியீட்டு விழாவை பிரமாண்டப்படுத்த, 'நம்மில் ஒருவர் எம்.கே.எஸ்.' என்ற ஹேஸ் டேக்கை உருவாக்கியது திமுக. இந்த 'நம்மில் ஒருவர் எம்.கே.எஸ்.' டைட்டில் சோசியல் மீடியாக்களில் பரபரப்பாக எதிரொலிக்க, இந்திய ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியது நம்மில் ஒருவர் ஸ்டாலின்.