Skip to main content

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சிய 28 குடிநீர் நிறுவனங்களுக்கு 'சீல்'

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

 

அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகள் மீது  நடவடிக்கை எடுக்க கோரி சென்னை  உயர் நீதிமன்றத்தில் பல்வேறு  பொதுநல வழக்குகள்  தாக்கல் செய்ததையடுத்து,   வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரித்தது. 


 

அதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அனுமதி இல்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு வருகின்றன.  

அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கண்காணிப்பதற்காக பொதுப்பணித்துறை (நிலத்தடி நீர்)  மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட 5 அரசுத்துறை அதிகாரிகள்  கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.  இக்குழுவினர் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி சட்ட விரோதமாக நிலத்தடிநீரை உறிஞ்சும்  குடிநீர் விற்பனை நிறுவனங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

 

கடலூர் மாவட்டத்தில் பல குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள்   பொதுப்பணித்துறை,  உணவு கட்டுப்பாட்டுத் துறை,  மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்றவற்றின் உரிய அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.  
 

அதையடுத்து கடந்த சில நாட்களாக அவ்வாறு அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு கடலூர்,  குறிஞ்சிப்பாடி,  பண்ருட்டி, விருத்தாசலம் சிதம்பரம், வேப்பூர், திட்டக்குடி  என  மாவட்டம் முழுவதும் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்த 28 குடிநீர் விற்பனை நிலையங்கள் மற்றும் போர்வெல்கள் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. 
 

நிலத்தடிநீரை பாதுகாக்கும் இந்த  அதிரடி நடவடிக்கைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்கின்றனர். பாரபட்சமின்றி அனைத்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தடிநீரை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர்.  அதேசமயம் தங்களின் தொழில் பாதிக்கப்படுவது குடிநீர் விற்பனை முகவர்கள் இரண்டு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரின் உத்தரவு; ஆய்வுக்குப் பிறகு 59 கடைகளுக்கு சீல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
59 shops sealed for selling banned tobacco products in Erode

முதல் - அமைச்சர் உத்தரவின்படி உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம், போலீசார், பொதுப்பணித்துறை ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் பள்ளி கல்லூரி அருகிலும், கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கலெக்டர் உத்தரவின்படி கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளில் குழு ஆய்வு மேற்கொண்டதில் 59 கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 59 கடைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டு ரூ. 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை, சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையினர் கொண்ட குழுவினர் முன்னிலையில்  வெண்டிபாளையம் மாநகராட்சி உரக்கடங்கில் அழிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 956 ஆகும். பொதுமக்கள் உணவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்திற்கு சீல்!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
BJP Election office sealed

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில் சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பா.ஜ.க. சார்பில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர் ராஜா தலைமையில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என அந்த இடத்தை வாடகைக்கு வாங்கி, பாஜகவின் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று பூட்டி சீல் வைத்துள்ளனர். சென்னை மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள் பாஜக தேர்தல் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.