ADVERTISEMENT

விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு சீல்; குமுறும் கோடைவாசிகள்!!

10:14 AM Feb 06, 2019 | kalaimohan

திண்டுக்கல் மாவட்டம் கோடை இளவரசியான கொடைக்கானல் சுற்றுலா தளமாக விளங்கி வருவதால், தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு போவது வழக்கம். இப்படி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி அண்ணா நகர், மூஞ்சிக்கல், நாயுடுபுரம், லேக் ஏரியா, பில்லர்லேக் உள்பட சில பகுதிகளில் கட்டிடங்களையும், ஓட்டல்களையும் கட்டியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தநிலையில்தான் சில சமூக ஆர்வலர்கள் மதுரை ஐகோர்ட்டில் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி பல கட்டிடங்களை எழுப்பி உள்ளனர். இந்த கட்டிடங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். அதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டும் கொடைக்கானலில் பல பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருந்த 45 ஓட்டல்களுக்கும், கட்டிடங்களுக்கும் சீல் வைக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் முருகேசன், நகர அமைப்பு அலுவலர் முருகானந்தம், பரமக்குடி, பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளில் உள்ள நகரமைப்பு அலுவலர்கள் ஆய்வாளர்கள் கொண்ட குழுவினரை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நான்கு குழுக்களாக பிரிந்து கொடைக்கானல் நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த ஓட்டல்கள், லாட்ஜ்களுக்கு சீல் வைத்து வருகிறார்கள்.அதுபோல் நகராட்சி கமிஷ்னர் முருகேசன் தலைமையிலான அலுவலர்கள் வாரகவேளி, ரெஸ்டாரெண்ட், உட்டீஸ் ஓட்டல் உள்பட சில ஓட்டல்களுக்கு சீல் வைத்து வருகிறார்கள். இப்படி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க செல்லும் நகராட்சி அதிகாரிகளுடன் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு முதலில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதன்பின் இந்த கட்டிட வளாகத்தை இழுத்து பூட்டி சீல் வைத்துவிட்டு வருகிறார்கள். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் இருபதுக்கும் மேற்பட்ட விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு அதிகாரிகள் 45 கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.

இப்படி விதிமுறைகளை மீறி கட்டிய கட்டிடங்களுக்கு சீல் வைத்த அறிக்கையை மதுரை ஐகோர்ட்டில் மாவட்ட நிர்வாகி நகராட்சி ஆணையாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் ஜனவரி 31ம் தேதி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதை தொடர்ந்து மதுரை ஐகோர்ட் கிளையும், மேலும் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 1417 கட்டிடங்களையும், மார்ச் 11ம் தேதிக்குள் ஆய்வு செய்து அப்படி விதிமுறை மீறிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பை துண்டித்து கட்டிடங்களுக்கும் சீல் வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கையில் அதிரடியாக களமிறங்கி வருகிறது.

இந்தநிலையில் கொடைக்கானலில் உள்ள லாட்ஜ் மற்றும் வர்த்தக உரிமையாளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் திண்டுக்கல்லுக்கு வந்து மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர். ஆனால் கலெக்டர் இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரியான வேலுவிடம் தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கடந்த 1976-ம் ஆண்டு போடப்பட்ட மாஸ்டர் பிளான் தொடர்ந்து இருந்து வருகிறதே தவிர அதை மாற்றி அமைக்கவில்லை. ஆனால் விதிமுறைகளின்படி ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாஸ்டர் பிளானை மாற்றி அமைக்க வேண்டும். அந்த விதிமுறையை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவரை கோர்ட் உத்தரவை நிறுத்தி வைத்து எங்களுக்கு கருணை காட்ட வேண்டும் என கூறி மனு கொடுத்து இருக்கிறார்கள். இப்படி அதிரடியாக மதுரை ஐகோர்ட் கிளை தொடர்ந்து கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்க சொல்லி வருவது கொடைக்கானல் வாழும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் கிளப்பி உள்ளது!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT