திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல்; மேல்பாதி கிராமத்தில் பரபரப்பு

Seal for Goddess Draupadi Temple; There is excitement in Melpadi village

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா, திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அந்தக் கோயிலுக்குள் அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளனர். அப்போது அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் ஒரு பிரிவினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பட்டியலின அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடி உறுதி தந்தார்.

இதனை அறிந்த மற்றொருபிரிவைச்சேர்ந்த மக்கள் கோயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அங்கு சென்றனர். அப்போது அவர்கள்தங்களின் சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நடந்துகொண்டு இருக்கும்போதே பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி அதில் இருந்த சிலர் தங்கள் கையிலிருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த அந்த மண்ணெண்ணெய் பாட்டில்களைப் பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களைக் காப்பாற்றினர்.

இரு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருவதால் யாரும் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருதரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டு அது தோல்வியில் முடிந்ததால் வருவாய் கோட்டாட்சியர் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்துள்ளார். கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து மேல்பாதி கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வடக்கு மண்டல ஐஜி தலைமையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

police temple Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe