சீனாவில் கடந்த மாதம் மாஸ்க் கிடைக்கவில்லை என்றபோதே தமிழ்நாட்டில் உள்ள பல மெடிக்கல்களுக்கு மாஸ்க் கொடுக்கவில்லை மாஸ்க் தயாரிப்பு நிறுவனங்கள். பிப்ரவரிக்கு முன்பு வரை ஒரு மாஸ்க் விலை ரூ. 3.50 க்க வாங்கி அதை ரூ.10 வரை விற்பனை செய்து வந்தனர். ஆனால் பிப்ரவரிக்கு பிறகு சிறிய மெடிக்கல்களுக்கு அனுப்புவதில்லை. இந்தநிலையில் தான் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் தாங்களாக முன்வந்து மாஸ்க் வாங்க மருந்துக்கடைகளை தேடிச் செல்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரூ. 3.50 க்கு வாங்கி மாஸ்க்கை ரூ. 30, 35 வரை அதிக விலைக்கு விற்க தொடங்கிவிட்டனர்.
தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி நேற்று நகரில் உள்ள சில மருந்துக்கடைகளை ஆய்வு செய்து அதிக விலைக்கு மாஸ்க்கை விற்ற ஒரு மருந்துக்கடைக்கு சீல் வைத்துவிட்டு சென்றார். மற்ற பல கடைகளில் தங்களுக்கான கொள்முதல் விலை அதிகமாக உள்ளதாக பில் காட்டி தப்பினார்கள்.
இந்தநிலையில் இன்றும் ஒரு மாஸ்க் விலை ரூ. 24 என்று விற்பனை செய்யப்படுவதாக பில்லுடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து ஒரு மருந்துக்கடைகாரர் கூறும்போது, மாஸ்க்கள் வழக்கமாக நகரங்களில் பெரிய மருத்துவமனைகள், அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவமனைகள் உள்ள பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகளில் தான் இருக்கும். மற்றபடி நகரத்தில் மற்ற இடங்களில் உள்ள மருந்துக்கடைகள், கிராமங்களில் உள்ள மருந்துக்கடைகளில் விற்பனை இருக்காது என்பதால் கொள்முதல் செய்வதில்லை. ஆனாலும் ஒரு சில பாக்கெட்கள் வாங்கி வைத்திருப்போம். பிப்ரவரிக்கு பிறகு மாஸ்க் தயாரிப்பு நிறுவனங்களே யாருக்கும் விற்பனை செய்வதை குறைத்துக் கொண்டார்கள். இப்போது வரை அது தான் நிலை. இருப்பு வைத்திருந்தவர்கள் தான் அதிக விலைக்கு விற்கிறார்கள். மனித உயிரோடு விலையாடுவது மனிதாபிமானமல்ல என்கிறார்கள்.
.