Sea Turbulence in Tamil Nadu; Warning leave for extreme tide

இந்திய கடல்சார் தகவல் மையம் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதில், “காற்றின் போக்கு காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும். கல்லக்கடல் எனும் நிகழ்வு இன்றும் (04.05.2024), நாளையும் (05.04.2024) ஏற்படும். கடல் அலை சீற்றத்துடன் இருக்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட கடலோர பகுதிகளில் சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

நாளை (05.04.2024) இரவு வரை தென் தமிழக மாவட்டங்களில் 0.5 மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலை எழும்புவதற்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் சில நேரங்களில் திடீரென எந்தக் குறிப்பும் அல்லது எச்சரிக்கையும் இன்றி ஏற்படும் பலத்த காற்றின் விளைவுதான் கல்லக்கடல் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.