
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் அனைவருமே திருச்செந்தூர் கடலில் புனித நீராடுவதை வாழ்வின் பெரும் பாக்கியமாக உணர்கின்றனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலை முதல் இரவு வரை கடலில் நீராடி உள்ளம் மகிழ்கின்றனர். தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களிலும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாட்களிலும் திருச்செந்தூர் கடலில் நீர் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைமைக்கு திரும்புவதும் அண்மை காலமாக வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இன்று (மே 26) காலை 11:30 மணி முதல் நாளை (மே 27) காலை 9. 09 வரை அமாவாசை உள்ளது. இதன் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நாழி கிணறு பகுதிக்கும் அய்யா கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 100 அடி தூரம் வரை கடலில் நீர் உள்வாங்கியுள்ளது. இதனால் பச்சை பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிகிறது. கடல் அலை உள்வாங்குவதும், வெளியேறுவதுமாக இருந்த போதிலும் பக்தர்கள் எவ்வித பதட்டமும் இன்றி வழக்கம் போல கடலில் புனித நீராடினர். தொடர்ந்து முருகப்பெருமானை மனமுருக தரிசனம் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி