Skip to main content

கடல் சீற்றம்... மாயமான இரு மாணவர்கள் -தேடி வரும் கடலோர காவல்படை 

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

marakkanam villupuram district


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது கரி பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளி ஆறுமுகம் மகன் மோகன். அதே பகுதியைச் சேர்ந்த சின்ன குட்டி மகன் முருகவேல். முருகவேல் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டில் உள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோகன், முருகவேல் மற்றும் அவர்களது நண்பர்கள் 5 பேர் மரக்காணம் தீர்த்தவாரி கடல்பகுதி ஓரம் குளிக்கச் சென்றுள்ளனர்.
 


அனைவரும் ஒன்றாகக் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சீற்றத்தில் சிக்கி முருகவேலை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதனைப் பார்த்த அவரது நண்பன் மோகன் முருகவேலைக் காப்பாற்றுவதற்காக அவர் அருகில் சென்று உள்ளார். அப்போது இரண்டு பேரும் அந்தக் கடல் அலையில் சிக்கி மூழ்கி மாயமாகி விட்டனர்.
 

இதனைப் பார்த்த அவர்களது சக நண்பர்கள் அலறியடித்துக்கொண்டு ஊருக்குள் ஓடி தகவல் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த கரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீனவர்கள் கடற்கரைக்குச் சென்று தேடியுள்ளனர். ஆனால் மாயமான இரு இளைஞர்களையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையடுத்து மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. காவல்துறை மூலம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கடலோர காவல்படையினர் கடலில் மூழ்கி மாயமான இரண்டு இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடலில் குளித்த இரு மாணவர்கள் மாயமானது பற்றி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.