marakkanam villupuram district

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது கரி பாளையம். இந்த பகுதியைச்சேர்ந்த உப்பளத் தொழிலாளி ஆறுமுகம் மகன் மோகன். அதே பகுதியைச் சேர்ந்த சின்ன குட்டி மகன் முருகவேல். முருகவேல் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டில் உள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோகன், முருகவேல் மற்றும் அவர்களது நண்பர்கள் 5 பேர் மரக்காணம் தீர்த்தவாரி கடல்பகுதி ஓரம் குளிக்கச் சென்றுள்ளனர்.

Advertisment

Advertisment

அனைவரும் ஒன்றாகக் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடலின் சீற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சீற்றத்தில் சிக்கி முருகவேலை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதனைப் பார்த்த அவரது நண்பன் மோகன் முருகவேலைக் காப்பாற்றுவதற்காக அவர் அருகில் சென்று உள்ளார். அப்போது இரண்டு பேரும் அந்தக் கடல் அலையில் சிக்கி மூழ்கி மாயமாகி விட்டனர்.

இதனைப் பார்த்த அவர்களது சக நண்பர்கள் அலறியடித்துக்கொண்டு ஊருக்குள் ஓடி தகவல் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த கரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீனவர்கள் கடற்கரைக்குச் சென்று தேடியுள்ளனர். ஆனால் மாயமான இரு இளைஞர்களையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையடுத்து மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. காவல்துறை மூலம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கடலோர காவல்படையினர் கடலில் மூழ்கி மாயமான இரண்டு இளைஞர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடலில் குளித்த இரு மாணவர்கள் மாயமானது பற்றி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.