Skip to main content

"சுருக்குமடி வலையை கண்டு கொள்ளாத அதிகாரிகள்...பறிபோனது மீனவன் உயிர்..!"

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

 

தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், இவற்றை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று, அரசாங்கம் எச்சரித்தாலும் மீனவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை. அதிகாரிகளும் பெரிதாக இதனை எடுத்துக் கொள்வதில்லை. இதனால், இன்று ஒரு மீனவனின் உயிர் பறிபோனது.

f

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த சந்திஸ்டன், முனியசாமி, முத்து, எட்டுராஜா, சண்முகவேல், அரசு, பிரசாத், ராமன் ஆகிய 8 பேர் பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் ஆழ் கடலில் சங்கு குளிப்பதற்காகச் சென்றனர். இவர்கள் கடலில் மூழ்கி சங்கு எடுக்கும்போது, அந்த வழியாக தாமஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு வந்துள்ளது.

 

விசைப்படகு மீனவர்கள் சுருக்குமடி வலையை இழுத்து வந்ததால், வலைக்குள் மீனவர் சந்திஸ்டன் சிக்கிக் கொண்டார்.  இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்குக்குளி மீனவர்கள் சந்திஸ்டனை காப்பாற்றுவதற்காக கூக்குரலிட்டனர். மேலும் விசைப்படகின் சுருக்குமடி வலையை மேலே தூக்குமாறும் அவர்கள் சத்தமிட்டுள்ளனர். அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதை உணர்ந்த விசைப்படகு மீனவர்கள், உடனடியாக வலைகளை அறுத்துவிட்டு கரைக்கு திரும்பி விட்டனர்.

 

இதற்கிடையே, சுருக்குமடி வலைக்குள் சிக்கிய சந்திஸ்டன் வெளிவர முடியாமல் ஆழ்கடலுக்குள் மூழ்கினார். அவரை சக மீனவர்கள் பல மணி நேரம் தேடியும் மீட்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து கரை திரும்பிய நாட்டுப்படகு மீனவர்கள், இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, விசைப்படகு உரிமையாளர் தாமஸ் உள்ளிட்ட 8 பேரை பிடித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான சந்திஸ்டனை கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.

 

சுருக்குமடி வலை மீன்வளத்தை மட்டுமல்ல.. மீனவனையும் அழிக்கும். இதை மீனவர்கள் உணர வேண்டும்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கடல் சார் உயர் இலக்கு படை தொடக்கம்!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Launch of Marine High Target Force

இந்தியாவிலேயே முதன்முறையாக மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்தியில் உள்ள கடல் வளங்கள் மற்றும் கடல் பல்லுயிர்களைப் பாதுகாக்க இந்தியாவின் முதல் கடல்சார் உயர் இலக்கு படை இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை  தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், “இந்த கடல்சார் உயர் இலக்கு படை பவளப்பாறைகள், கடல் புல், பிற கடல் தாவரங்கள் மற்றும் கடல் உயிரினங்கள் போன்ற மதிப்புமிக்க கடல் பல்லுயிர்களின் பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயம் உருவாவதற்கான தொடக்கமாக அமையும்” என்றார்.

மேலும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  சுப்ரியா சாஹு  இந்நிகழ்வு பற்றி குறிப்பிடுகையில், “கடல் பல்லுயிர் பெருக்கத்தை பிரத்தியேகமாக கையாள்வதற்கான நீலப் படையை (Blue cadre) உருவாக்க இத்தனித்துவமான முயற்சி உதவியாக இருக்கும். கடல் மற்றும் கடலோர சூழலியலை சிறப்பான முறையில் பாதுகாக்க இந்த உயர் இலக்கு படை தமிழ்நாடு வனத்துறையின் திறனை அதிகரிக்க உறுதுணையாக அமையும்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், வனத்துறைத் தலைவருமான சுப்ரத் மொஹபத்ரா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், தலைமை வன உயிரினக் காப்பாளருமான ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வன உயிரினம்) வி. நாகநாதன் மற்றும் இராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். 

Next Story

சீர்காழியில் கரையொதுங்கிய மர்மப்பொருள் வெடிக்க வைத்து அழிப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Detonation of mysterious object washed ashore in Sirkhazi

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதனை பாதுகாப்புடன் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நாயக்கர்குப்பம் மீனவ கிராமப் பகுதியில் கடந்த 12 ஆம் தேதி 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில மொழியில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று கரை ஒதுங்கியது. பார்ப்பதற்கு கேஸ் சிலிண்டர் போன்ற அமைப்பில் இருக்கும் அந்த மர்மப் பொருள் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக இது தொடர்பாக அந்தப் பகுதி மீனவர்கள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். சுமார் ஒன்றரை அடி நீளமும் 6 அங்குலம் விட்டமும் கொண்ட அந்த உருளை குறித்து விசாரணை செய்யப்பட்டதில், ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்ஞைகளை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் இது என்பது எனத் தெரியவந்தது. இருப்பினும் அந்தப் பொருளை யாரும் தொட வேண்டாம் என தடுப்பு அமைத்து சென்றனர் போலீசார்.

Detonation of mysterious object washed ashore in Sirkhazi

இந்நிலையில் நீர்மூழ்கி கப்பலில் பயன்படுத்தப்படும் அந்த கருவியானது வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் பாதுகாப்பாக வெடித்து அழிக்கப்பட்டது. இதற்காக பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு அதனுள் அந்த கருவியை வைத்து வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்காக போலீசாரும் இருந்தனர்.