ஈரோடு, சாஸ்திரிநகர், வாய்க்கால்மேடு பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் ஒரு கும்பல் மதுபோதையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஒரு வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டினர்.
இதில் அந்த வாலிபரின் கை, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைக் கண்ட அப்பகுதி மக்கள் சத்தம் போட்டவாறு ஓடி வந்ததை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதில் பலத்த காயமடைந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராஜபிரபு, நவநீதகிருஷ்ணன், அனுராதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த கும்பல் விட்டுச் சென்ற கார், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினர். போலீசார் நடத்திய விசாரணையில், அரிவாளால் வெட்டப்பட்டவர் ஈரோடு மரப்பாலத்தை சேர்ந்த நிகாத் (19) என்பதும், அவர் மீது ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. ஏற்கனவே, குற்ற வழக்கில் சிக்கி இருப்பவர்கள் நிகாத்தை கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.