சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று (14/09/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற விழாவில், சென்னையில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த 'சிற்பி' என்ற திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக காவல்துறை தலைவர் முனைவர் சைலேந்திர பாபு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காகவே இந்த சிற்பி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சிறார் குற்றங்களைக் கட்டுப்படுத்த தமிழக காவல்துறைத் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது. சிறார்கள் குற்றம் அதிகரிக்க குடும்ப வறுமை, பொருளாதார நிலைமையே காரணமாக அமைந்துள்ளது. சுய ஆளுமை திறன், பெற்றோர் பேச்சைக் கேட்டு நடப்பது போன்ற பண்புகளை சிறார்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். சிற்பி திட்டப் பயிற்சிக் காலத்தில் எந்தவித மனித உரிமை மீறலும் இருக்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
சென்னையில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த 'சிற்பி' என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்களால் பாதிக்கப்படும் சிறுவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிற்பி திட்டத்தின் கீழ் வழிகாட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100 பள்ளிகளில் தலா 50 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு என்சிசி போல் தனி சீருடை அளித்து உரிய பயிற்சியை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. பள்ளிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் 'சிற்பி' மாணவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.