
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து (74)உடல்நிலக் குறைவால் இன்று (16-06-25) காலமானார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஞ்ஞானி முத்து. இவர், ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றினார். இவர் மறைந்த அணு விஞ்ஞானியும், முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் உடன் இஸ்ரோவில் பணியாற்றியுள்ளார். விஞ்ஞானம், அறிவியல், கவிதை, வரலாறி, திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனும் 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய 4 புத்தகங்களுக்கும் தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்த விஞ்ஞானி நெல்லை முத்து, உடல்நலக் குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்துள்ளார். இவரது உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மூத்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.