தமிழ்நாட்டில் நடப்பாண்டில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 2018&19 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் புதிய ஆசிரியர்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை. தமிழக அரசின் மேல்நிலைப்பள்ளிகளில் 1640 ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப்பள்ளிகளில் 2405 பணியிடங்கள் உட்பட 4963 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் புதிய ஆசிரியர்களை நியமிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு பள்ளிகளில் 349 தமிழாசிரியர்கள், 273 ஆங்கில ஆசிரியர்கள், 490 கணித ஆசிரியர்கள், 773 அறிவியல் ஆசிரியர்கள், 520 சமூக அறிவியல் ஆசிரியர்கள் என மொத்தம் 2405 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது 05.03.2018 அன்றுள்ள நிலவரமாகும். 01.12.2017 அன்று நிலவரப்படி காலியிடங்கள் எண்ணிக்கை 2084 ஆகும். இதில் மாவட்ட வாரியான காலியிடங்களைப் பார்த்தால் 78% காலியிடங்கள் வட மாவட்டங்களில் தான் உள்ளன. அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 383 காலியிடங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 381, வேலூர் மாவட்டத்தில் 335, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 271 என 4 மாவட்டங்களில் மட்டும் 1370 காலியிடங்கள் உள்ளன. இது மொத்த காலியிடங்களில் மூன்றில் இரண்டு பங்காகும். மாநிலத்தின் மொத்த காலியிடங்களில் 66% காலியிடங்களை 4 மாவட்டங்களில் மட்டும் வைத்திருப்பது அந்த மாவட்டங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதைத் தவிர வேறில்லை.
இந்த நிலை இன்று... நேற்றல்ல... 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த காலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதங்களில் இந்த மாவட்டங்கள் தான் கடைசி 5 இடங்களில் மாறி மாறி வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆக, இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் போதிய அளவில் தேர்ச்சி பெற முடியாததற்கு அவர்கள் காரணமல்ல, அவர்களுக்கு பாடம் கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்காத அரசு தான் காரணம் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இதனால் சில மாவட்டங்களில் தேவைக்கும் அதிகமாக ஆசிரியர்கள் உள்ளனர். உதாரணமாக சென்னை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலியிடங்களே இல்லை என்பதுடன், அங்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாகவும் ஆசிரியர்கள் உள்ளனர். மதுரை, தூத்துக்குடி (தலா 2), கோவை, கரூர், திருச்சி (தலா 3), சிவகங்கை (4), இராமநாதபுரம் (8) ஆகிய மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தான் காலியிடங்கள் உள்ளன. ஆசிரியர்களை நியமிப்பதில் மாவட்டங்களுக்கிடையே பாகுபாடு காட்டுவது எந்த வகையில் நியாயம்? பின்தங்கிய மாவட்டங்களின் மாணவர்கள் முன்னேற வேண்டாமா.... பின்தங்கியே கிடக்க வேண்டுமா? இந்த நிலையை மாற்ற தமிழக அரசு தயாராகக் கூட இல்லை என்பது தான் கொடுமை.
தமிழ்நாட்டில் கடந்த 2013, 2017-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 30 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் வேலை வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, இப்போது காலியாக உள்ள பணியிடங்கள், விரைவில் காலியாகும் பணியிடங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். கிராமப்புற பகுதிகள், தொலைதூரப் பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சிறப்புப் படி, பதவி உயர்வில் முன்னுரிமை ஆகியவற்றையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆசிரியர்களின்றி தடுமாறும் பள்ளிகள்: புதிய ஆசிரியர்களை நியமிக்க மறுப்பதா? அன்புமணி கண்டனம்!
சார்ந்த செய்திகள்
Next Story
'மாமன்னன் படத்தில் நடித்தால் மட்டும் போதாது'-அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர் இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர் உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.
கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.
Next Story
“அ.தி.மு.க வாக்காளர்களே..” - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில், தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கின்ற பா.ம.க வேட்பாளரான சவுமியா அன்புமணியை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “தருமபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். சவுமியா அன்புமணி ஐ.நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றியும், பெண் குழந்தைகளை பற்றியும் குரல் கொடுத்தவர். எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார்.
நாம் கால காலமாக திமுக, அதிமுக என மாறி மாறி வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவை எடுங்கள். அதிமுக வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும் வரப்போவதில்லை. பிரதமராகவும் வரப்போவதில்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்” என்று கூறினார்.