ADVERTISEMENT

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளால் கண்பாதிப்பு வருமா?- அறிக்கை அளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

08:37 AM Jun 26, 2020 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து ஜூலை 6- ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கும் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் வகுப்புக்களில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது, ஆபாச இணையத்தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதால், அந்த இணையத்தளங்களை, மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர், உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல, ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப் டாப் மூலமும் பார்ப்பதால், மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1- ஆம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை ஆன் லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும், 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புக்கள் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரி, விமல் மோகன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், ஆன்லைன் வகுப்புக்களுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுப்பது தொடர்பாக, உள்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க, இரண்டு வார கால அவகாசம் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல, உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க, ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சி.முனுசாமி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரிய அனைத்து வழக்குகளையும், ஜூலை 6- ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT