School teacher broke the door of her house and stole 17 pounds of jewelry

ஈரோடு மாவட்டம் திண்டல் தெற்குபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (47). இவரது கணவர் லட்சுமி நாராயணன். சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது ஒரே மகன் ஹரிஷ். அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். ஸ்ரீவித்யா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் கடந்த 9 ஆம்தேதி ஸ்ரீவித்யா தனது மகனுடன் உறவினர் வீட்டுத்திருமணத்திற்குச் சென்னை சென்றுவிட்டார். திருமணம் முடிந்து ஸ்ரீவித்யா தனது மகனுடன் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறிக் கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் உள்ள அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 17 பவுன் நகை மற்றும் 8 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீவித்யாவின் வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டுஉள்ளே வந்த மர்ம நபர்கள், பணம் மற்றும் நகையைத்திருடியது தெரியவந்தது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களைச் சேகரித்தனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். ஆசிரியை வீட்டில் பணம் - நகை திருட்டுப் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment