கரூரில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், தந்தை முகமது பரீத் (46) மகள் ஜுகினாஜ் (17) சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. தாய் நஸ்ரின் பானு (39) மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் கிழக்கு, அமராவதி நகரை சேர்ந்தவர் முகமதுபரீத் (46). கரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நஸ்ரின் பானு (39), மகள் ஜுகினாஜ் (17) வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே கடன் மற்றும் குடும்ப பிரச்சனை இருந்துவந்ததாக கூறப்படுகிறது.
இதனால், முகமது பாரூக் விஷத்தை குடித்துவிட்டு, தனது மனைவிக்கும், மகளுக்கும் தெரியாமல் தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார். இந்த விவகாரம் அறிந்த முகமது பரீதின் அண்ணன் சாதிக் பாட்ஷா ஆட்டோ மூலம் 3 பேரையும் வடிவேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். ஆனால், சிறுமி ஜுகினாஜ் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
அங்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போக, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்படி செல்லும் வழியில் முகமது பரீத் இறந்துவிட்டார். நஸ்ரின் பானு, தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையில் உள்ளார்.