காய்ந்த பனை மட்டைகளை செதுக்கி, குச்சியாக தயார் செய்து மாணாக்கர்களை பதம் பார்த்து வருகின்றனர் பள்ளி ஆசிரியர்கள். இது கண்டிக்கத்தக்க வேதனை எனினும், இதற்காகவே பள்ளி சீருடையுடன் மாணாக்கர்களை காடுகளுக்கு அனுப்பி பனை மட்டைகளை வெட்டி சேகரித்து வருவது வேதனையிலும் வேதனை என்கின்றனர் அவ்வூர் மக்கள்.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்திலுள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. 6ம் வகுப்பு தொடங்கி 12ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் ஏறக்குறைய 352 மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், கணினி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் என சுமார் 28 ஆசிரியர்களை கொண்டு இயங்கும் இப்பள்ளியில் மாணாக்கர்களை தண்டிக்க பனை மட்டைகளை பயன்படுத்துக்கின்றனர் என்கின்ற குற்றச்சாட்டு கடந்த சில மாதங்களாகவே உண்டு.
பள்ளி நிர்வாகமும் மறுத்து வந்த நிலையில், இன்று காலையில் பள்ளியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரமுள்ள வடக்கு சாலைக்கிராமத்தின் வயல்காடுகளில், கையில் நீண்ட அரிவாளுடன் பனைமரம் ஏறி பனை மட்டையை சேகரம் செய்தனர். அரசு மேல்நிலைப்பள்ளியின் இரு மாணவர்கள். பள்ளி சீருடையுடன் பனை மட்டை தயார் செய்த அவர்களோ., " பசங்களை அடிப்பதற்காக சார் தான் கொண்டு வர சொன்னார்." என்கின்றனர் நம்மிடம்.! இத்தகவல் மாணாக்கர்களின் பெற்றோர் தரப்பை சென்றடைய, மாவட்ட கல்வி அதிகாரியை நாடவுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.