ADVERTISEMENT

கஞ்சாவுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்... கீரமங்கலத்தில் போராட்டம் நடத்த பெற்றோர்கள் முடிவு!

11:32 PM Jun 27, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் மதுபோதையை கடந்து மாற்றுப் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள். சமீப காலமாக கஞ்சா போதைக்கு மாணவர்கள் அதிகமாக அடிமையாகிவிட்டனர். இதனால் தினந்தோறும் விபத்துகள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், திருட்டு, வழிப்பறி என பல சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 'பள்ளிச் சிறுவர்களை சீரழிக்கும் கஞ்சா போதை!' என்ற தலைப்பில் நக்கீரன் இதழில் செய்தி வெளியான நிலையில் சில மாணவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை ஊருக்கு ஒரு மாணவன், இளைஞன் அடிமையானதிலிருந்து தற்போது புரையோடி கிராமத்திற்கு 10 வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிக திறனும், விலையும் கொண்ட பைக்களை திருடி வந்து ஓட்டுவதும் சில மாதங்களில் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பது வழக்கமாகிவிட்டது.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி கோயிலில் நக்கீரர் சிலை அருகே ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் பேசும்போது, கஞ்சா வியாபாரமும், புகைக்கும் பழக்கமும் பள்ளி மாணவர்களிடையே அதிகமாகப் பரவிவிட்டது. இதனை பல பெற்றோர்கள் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அந்த மாணவர்களை மீட்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம் மற்ற மாணவர்கள் சிக்காமல் இருக்கவும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மேலும் யார் கஞ்சா விற்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும். அதேபோல கஞ்சா பழக்கத்தில் உள்ள சிறுவர்களை பைக் போன்ற வாகனங்களைத் திருடி வரச் செய்து அதனை வாங்கி விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே புரையோடிப் போன கஞ்சா பழக்கத்திலிருந்து மாணவர்களை காப்பாற்ற முடியும் இல்லை என்றால் இவர்களின் இழக்கு மாணவிகள் பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளது என்றனர்.

இறுதியில் மாணவர்களை கஞ்சா போதையிலிருந்து மீட்கக்கோரி பெற்றோர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஜூலை 5 ந் தேதி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடத்துவது என்று முடிவானது.போலீசாருக்கு அடையாளம் தெரிந்த கஞ்சா விற்பனை செய்யும் மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் மூலம் தேவையான ஆலோசனைகள் வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அடுத்த தலைமுறை கஞ்சாவின் அடிமை தலைமுறையாக மாறும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT