Skip to main content

கஞ்சாவுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்... கீரமங்கலத்தில் போராட்டம் நடத்த பெற்றோர்கள் முடிவு!

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

School students addicted to cannabis ... Parents decide to hold a struggle

 

தமிழகம் முழுவதும் மதுபோதையை கடந்து மாற்றுப் போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள். சமீப காலமாக கஞ்சா போதைக்கு மாணவர்கள் அதிகமாக அடிமையாகிவிட்டனர். இதனால் தினந்தோறும் விபத்துகள், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், திருட்டு, வழிப்பறி என பல சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 'பள்ளிச் சிறுவர்களை சீரழிக்கும் கஞ்சா போதை!' என்ற தலைப்பில் நக்கீரன் இதழில் செய்தி வெளியான நிலையில் சில மாணவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியானார்கள். சில மாதங்களுக்கு முன்பு வரை ஊருக்கு ஒரு மாணவன், இளைஞன் அடிமையானதிலிருந்து தற்போது புரையோடி கிராமத்திற்கு 10 வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிக திறனும், விலையும் கொண்ட பைக்களை திருடி வந்து ஓட்டுவதும் சில மாதங்களில் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பது வழக்கமாகிவிட்டது.

 

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி கோயிலில் நக்கீரர் சிலை அருகே ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் பேசும்போது, கஞ்சா வியாபாரமும், புகைக்கும் பழக்கமும் பள்ளி மாணவர்களிடையே அதிகமாகப் பரவிவிட்டது. இதனை பல பெற்றோர்கள் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அந்த மாணவர்களை மீட்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களிடம் மற்ற மாணவர்கள் சிக்காமல் இருக்கவும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மேலும் யார் கஞ்சா விற்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும். அதேபோல கஞ்சா பழக்கத்தில் உள்ள சிறுவர்களை பைக் போன்ற வாகனங்களைத் திருடி வரச் செய்து அதனை வாங்கி விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே புரையோடிப் போன கஞ்சா பழக்கத்திலிருந்து மாணவர்களை காப்பாற்ற முடியும் இல்லை என்றால் இவர்களின் இழக்கு மாணவிகள் பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளது என்றனர்.

 

இறுதியில் மாணவர்களை கஞ்சா போதையிலிருந்து மீட்கக்கோரி பெற்றோர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஜூலை 5 ந் தேதி கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடத்துவது என்று முடிவானது.போலீசாருக்கு அடையாளம் தெரிந்த கஞ்சா விற்பனை செய்யும் மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் மூலம் தேவையான ஆலோசனைகள் வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அடுத்த தலைமுறை கஞ்சாவின் அடிமை தலைமுறையாக மாறும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.